கவிஞர் சாம்ராஜ் அமர்வு: உரைநடையில் கவிதை

விவாத்திற்கான முன்குறிப்பு:

கவிதையில், புனைவில் எட்டப்படும் கவித்துவம் உரைநடையிலும்  அபுனைவிலும் கூட எட்டப்பட்டு இருக்கின்றன. அவற்றை தொட்டுப் பேசும் அமர்வாக இது இருக்கும்.

கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் புயலிலே ஒரு தோணி , தியாகுவின் சுவருக்குள் சித்திரங்கள், ஷோபா சக்தியின் - ம் ஆகியவற்றை கவனமாக படித்து வரும்படி கேட்டுக் கொள்கிறோம். 


அவசிய வாசிப்பு பகுதிகள்

புயலிலே ஒரு தோணி - ப. சிங்காரம்:

நகரங்கள் எவ்வளவு விரைவாய் மாறுகின்றன! 1941-இல் திரும்பியபோது பார்த்த மதுரைக்கும், உயர் நிலைப்பள்ளியில் சேரப் போனபோது பார்த்த மதுரைக்கும் எவ்வளவு வேற்றுமை! லாஸ்ரடோ ஷெனாய் நகராட்சி கமிஷனராக வருவதற்கு முந்திய காலம் அது - 

தெருவில் பாதியை, கட்டடங்களுக்கு முன்னே நீட்டிய 'கவர்னர் தட்டி' மறைத்திருக்கும். கழிகளை ஊன்றிப் பலகை அடைத்துச் சாய்ப்புத் தட்டி கவர்னர் தட்டி - இறக்கியிருப்பார்கள். மேலே ஓட்டுக் கடைகள். பலகைக்குக் கீழே, எச்சில் தொட்டி உரிமையாளர்கள் குடும்பம் நடத்துவர். பிறப்பு - இணைப்பு - இறப்பு எல்லாம் அங்கேயே நடைபெறும்.

பஸ் நிலையம் இருக்கும் இடம் வியாழக்கிழமைச் சந்தைத் திடலாயிருந்தது. செம்மண் உருண்டையிலிருந்து மோட்டார் எந்திரங்கள் வரை, தும்பைச் செடியிலிருந்து புலிப்பல் வரை அங்கே வாங்கலாம். 

எந்த ஊருக்குப் போகும் 'கார்' (பஸ்கள் கார் என்றும், கார்கள் பிளஷர் என்றும் கண்டக்டர் கிளீனர் என்றும் அழைக்கப்பட்ட காலம்) எங்கிருந்து எப்போது புறப்படும் என்று யாருக்கும் தெரியாது. நகரத் தெருக்களில் எல்லாம் கார்கள் பவனி வரும்.

பக்கத்துக் கம்பிகளைப் பிடித்துத் தொங்கியவாறு தெருவுக்குத் தெரு வெவ்வேறு ஊர்ப் பெயரைக் கூவிப் பிரயாணிகளை ஏற்றுவர் கார் ஏசண்டுகள். குறித்த ஊருக்குச் செல்லும் பிரயாணிகள் ஐந்தாறு பேர் ஏறியதும், மற்றவர்களை மூட்டை முடிச்சுகளுடன் எங்காவது ஓரிடத்தில் இறக்கிவிடுவார்கள். முணுமுணுத்தால் அடி விழும். அது லாஸ்ரடோ ஷெனாய் மதுரை நகராட்சி கமிஷனராக வந்து, சென்ட்ரல் பஸ் நிலையம் அமைத்து, எல்லாக் 'கார்'களும் அங்கிருந்தே - இன்னின்ன ஊர்களுக்குச் செல்லும் வண்டிகள் இன்னின்ன இடங்களிலிருந்தே இன்னின்ன நேரங்களில் புறப்பட வேண்டுமென்று ஏற்பாடு செய்வதற்கு முந்திய காலம்.

ஒரே சமயத்தில் ஒரே ஊருக்கு மூன்று நான்கு கார்கள் புறப்பட்டு ஆறு, கண்மாய் வயலில் எல்லாம் இறங்கி ஏறி ஒன்றையொன்று விரட்டிப் பற்றி முந்தும். சின்ன மங்கலம் போன 'கிருஷ்ண ஜெயம்' கார் டிரைவர் ‘டாலர்’ ராஜமணி அய்யர், முன்னே சென்ற 'சிதம்பர விலாஸ்' டிரைவர் ராமுண்ணி மேனனைப் பீட் அடிப்பதற்காக, கண்மாய்த் தண்ணீரின் குறுக்கே காரை விட்டுக் கரையேறி முந்தியது மோட்டார் உலகத்தில் பிரபலமானதொரு நிகழ்ச்சி.

சோற்றுக் கடைத் தெருவில் (இப்போதைய பெயர் மீனாட்சி கோயில் தெரு) சோற்றுக் கடைகள். கடைத் திண்ணைகளில் பெரும் பெரும் அண்டாக்களைத் தங்கம் போல் மினுக்கித் தண்ணீர் நிறைத்துப் பட்டை பட்டையாய் விபூதி பூசிச் சந்தன - குங்குமப் பொட்டிட்டு முக்காலிகளின் மேல் வைத்திருப்பார்கள். பக்கத்தில், சட்டை போட்ட ஆள் திருநீற்றுக் கோலமாய்ப் பலகை மீது சம்மணம் கூட்டி உட்கார்ந்து தெருவில் போவோரை ஓயாமல் கூவி அழைப்பார்: "வாங்க! சுடச் சுடச் சோறு' கறிக்குழம்புஞ்சோறு! வாங்க, வாங்க!”

மேற்கத்திப் பார வண்டிக்காரர்கள் வயிறு புடைக்கத் தின்றபின், ஓசி வெற்றிலையும் வாங்கிப் போட்டுக்கொண்டு ஏப்ப முழக்கத்துடன் வெளியேறுவார்கள்.

“சுண்ணாம்பு சேத்திருக்கானப்பா, சோறு எடுக்கலை.'

“இதெல்லாம் என்ன கிளப்பு... கிளப்புன்னிச் சொல்றதுக்கு குண்டத்தூர் நாய்க்கர் ஒருத்தர் திண்டுக்கல்லுல நடத்துறாரு, அதுதான். சாப்பாடுன்னாச் சாப்பாடு, இப்படி அப்பிடியினு சொல்ல முடியாது! தினசரி குடல் கறி, இல்லாட்டி தலைக்கறி, விசாலனுக்கு விசாலன் ராத்திரியில பிரண்டைக் குழம்பு வைப்பார், பாருங்க. அசல் கெளுத்தி மீன் குழம்புதான்!"

இம்பீரியல் சினிமாவுக்கு ஓர் அணா டிக்கெட். மாடியில் இருக்கும் 'சேர்' ஆட்கள் இடையிடையே, கீழே, தரையர்கள்மீது வெற்றிலை எச்சிலைத் துப்புவர். தரைப் பிரபுக்கள் சதைச் சொற்களால் ஏசிக் கண்டனம் தெரிவிப்பார்கள்: "டேய்...........!''

திரையில் எடிபோலோ, டக்ளஸ் பேர்பாங்க்ஸ் படங்கள் - "ஏய்!திரும்பிப் பார்ரா, எதிரி வர்றான்டா...! விடாதே, பிடி, குத்து, நல்லாக் குத்து...! டேய் உதவிக்காரா! ஓடியாடா, ஆக்கிட்காரியை எதிரி தூக்குறான்டா! இந்தா ஆக்கிட்காரன் வந்துட்டான்! குத்து, அப்படிக்குத்து, கும்மாங்குத்துக் குத்து!” விலாத் தெறிக்கச் சிரிக்க வைக்கும் அரை மீசை சார்லி சாப்ளின், கண்ணாடிக்கார ஹெரால்ட் லாயட்... குரலில்லா உருவங்கள் திரையில் கூத்தாடுகின்றன. குதிரைகள் தாவி ஓடுகின்றன. துப்பாக்கிகள் நெருப்புக் கக்குகின்றன - ‘காணத் தவறாதீர்கள் கத்திச் சண்டைகள், ஜம்பிங்குகள், மாஜிக் வேலைகள், காதல் சீன்கள் நிறைந்த மகத்தான படம். ‘உதை மாஸ்டர்’ எடிபோலோவின் சவுக்கடி சீன் பார்க்கப் பார்க்கப் பரவசமூட்டும்..."

சின்னத் தகரக் கொட்டகை, பெரிய தகரக் கொட்டகை - கந்தர்வ கான கிட்டப்பா: 'நாற்பது வேலி நிலம் இன்னும் நட்டாகவில்லை’. இசையரசி சுந்தராம்பாள்: 'வெட்டுண்ட கரங்கள் வேதனையாக'. தேச பக்தர் விசுவநாத இசையரசி தாஸ்: 'கதர்க் கொடிக் கப்பல் தோணுதே.' ராஜலட்சுமி, வேலாம்பாள், ருக்மணிபாய். 'ஹார்மோனியச் சக்ரவர்த்தி' காதர் பாட்சா, ‘ஸ்திரீ பார்ட்’ அனந்தநாராயண அய்யர், 'ஹிந்துஸ்தான் கவாய்' நடராஜ பிள்ளை; ‘பபூன்’ சண்முகம், 'காமிக்' சாமண்ணா, 'ஜோக்கர்' ராமுடு. ராஜாம்பாளே ராஜாம்பாளாய் நடிக்கும் ‘ராஜாம்பாள்' ஸ்பெஷல் நாடகம். கன்னையா கம்பெனி 'தசாவதாரம்'. 'ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி'களின் சவுக்கடி சந்திரகாந்தா, பம்பாய் மெயில், ராஜபக்தி....

பெரிய பாலம் கட்டுவதற்கு வெள்ளைக்கார என்ஜினீயர் கொடுத்த நரபலி; தலைச் சூலியான பிராமணப் பெண்ணைத் தத்தனேரி சுடுகாட்டில் பலி கொடுப்பதற்காக, நள்ளிரவில் அந்தர விளக்காய்த் தொங்கி அழைத்துச் சென்ற மலையாள மந்திரவாதியை சட்டைக்கார சார்ஜண்ட் பின்தொடர்ந்து போய் அக்கரை இறக்கத்தில் சுட்டுக்கொன்றது; பெரிய சண்டியர் கேருசாகிபை சப் இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் அடித்துக் கட்டி கரகரவென்று தெருப்புழுதியில் இழுத்துச் சென்றது. இவையெல்லாம் மாணவர்கள் அச்ச வியப்புடன் பேசிக்கொண்ட மர்ம நிகழ்ச்சிகள்.

மதுரையில்தான் எத்தனை திருவிழாக்கள். சித்திரைத் திருவிழா, பிட்டுத் திருவிழா, தெப்பத் திருவிழா.... ஆ, மாரியம்மன் தெப்பத் திருவிழா... வண்டியூர்த் தெப்பக் குளத்துக்கும் வைகை ஆற்றுக்கும் இடையே உள்ள தோப்புகளில் விரிப்புகளைப் பரத்தி அமர்ந்து குடும்பம் குடும்பமாய்க் கட்டுணா உண்பார்கள். சிறுவர்கள் துள்ளி ஓடுவர்; பெண்கள் வெற்றிலைச் சிவப்பு வாயால் அதட்டுவார்கள்.... மாலையில் குளக்கரை உள்தட்டு நெடுகிலும் நெருக்கமாய் அகல் விளக்குகள் எரிய, எண்ணற்ற தங்க வேல்களால் குத்துண்டதுபோல் தண்ணீர் குழம்பி மின்னும். மலர்ந்த பால் நிலவு தென்னை மரக் கொண்டைகளுக்கு மேலேறிக் குளிரொளித் தென்றல் பொழிந்து நிலத்தையும் மானிடரையும் மோகன மயக்கத்தில் ஆழ்த்தும் வேளையில் ‘தெப்பம்’புறப்படும்.....

---------------------------------------------------------




சுவருக்குள் சித்திரங்கள் - தியாகு

என் சிறை வாழ்க்கையில் முதல் நான்காண்டு காலம் முடிவை நெருங்கிக் கொண்டிருந்த போதிலும், திருச்சி மத்திய சிறைக்குள் அதுவரை எனக்குப் பரிச்சயமான இடங்கள் மிகச் சிலவே. அந்த மிகச் சிலவற்றில் சி.பி. கண்டமும் ஒன்று.

இந்த சி.பி. கண்டத்தில்தான் முதன்முதலாகத் தோழர் ஏ.ஜி.கே.யைச் சந்தித்தேன். இந்த இடத்தில்தான் எங்கள் முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. சில மாதங்கள் முன்புவரை நானும் லெனினும் இங்கிருந்துகொண்டு இந்தக் கண்டத்துக் கைதிகளோடு சிரிப்பும் விளையாட்டுமாய்க் கழித்த பொழுதுகளை மறக்க முடியாது. சிரிப்பும் விளையாட்டும் மட்டும்தானா? எழுத்தும் படிப்பும் கூடத்தான். எழுதப் படிக்கத் தெரியாத கைதிகளுக்கு இந்தக் கண்டத்து வராந்தாவில்தான் எண்ணும் எழுத்தும் கற்றுத் தந்தோம். சிறைப்படுத்தப்பட்டோர் நலவுரிமைச் சங்கம் கட்டிய காலத்தில் அதிகாரப் பீடத்தின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு நாங்கள் நடத்திய இரகசியக் கூட்டங்களுக்கு இந்தக் கண்டத்துச் சுவர்களும் மரங்களும் சாட்சி. வரலாற்றுச் சிறப்புமிக்க அந்தச் சிறைப் போராட்டம் மே நாள் விடியலில் எழுந்தபோது, இந்தக் கண்டத்துக் கொட்டடியில்தான் நான் குந்திக் குரலெடுத்துப் போர்ப் பிரகடனம் செய்தேன்.

இந்த மரண தண்டனைக் கூடத்து மாதுளை மரங்கள் பூக்கும், பிஞ்சு விடும். பிஞ்சு காயாக விட்டாலும் காய் கனியாக விட மாட்டார்கள். மனிதர்களுக்கு அவ்வளவு அவசரம்!

இந்த மாதுளை மரங்களைச் சுற்றி என்னைத் தூக்கிக்கொண்டு ஓடி விளையாடிக் களித்த எங்கள் பாலுவைக் கடைசி முறையாகப் பார்த்திட இதோ நான் அதே சி.பி. கண்டத்துக்குள் நுழைகிறேன். பாலுவும்கூட மற்றொரு மாதுளைப் பிஞ்சுதானோ? காயான போதிலும் கனியாக விடாமல் பறிக்கப்படும் நிலை... மரணத்துக்கு அவ்வளவு அவசரம்!

சி.பி. கண்டத்து வராந்தாவில் நான் நடந்தபோது, கண்டத்துக் கைதிகள் தத்தமது கொட்டடி வாயிலில் நிற்பது தெரிந்தது. மயான அமைதி என்பார்களே, அப்படி ஓர் அமைதி, நானும் என்னை அழைத்துச் சென்ற உதவிச் சிறை அலுவலரும் நடக்கிற ஓசை அந்த அமைதியை அகோரமாய்க் கிழிப்பது போலிருந்தது. யாரையும் ஏறிட்டுப் பார்க்காமல் பாலகிருஷ்ணனின் கொட்டடியை அடைந்தேன். பிறகுதான் தலைநிமிர்ந்து பார்த்தேன்.

என்ன அதிர்ச்சி! ஐயோ, இது பாலுதானா? எங்கள் பாலுதானா? முகம் வெளிறிப்போய் இருந்தது. சவக்களை என்பார்களே, இது தானோ? இரு கண்ணிலிருந்தும் பெருகி வழிந்து கொண்டிருந்தது கண்ணீர்! ஆம், கண்ணீரேதான்! பாலு அழுகிறார் என்றால், இந்தக் கண்ணீருக்குப் பின்னால் எத்தகைய பேருணர்ச்சி மறைந்திருக்க வேண்டும் - கரையைத் தொடும் சிற்றலைக்குப் பின்னால் பெருங்கடலின் கடுஞ்சீற்றம் மறைந்திருப்பதுபோல!

அந்தப் பேருணர்ச்சியை பாலகிருஷ்ணன் வெளிப்படுத்திய போது எனக்கு ஏற்பட்ட திகைப்புக்கு அளவில்லை!

என் உணர்ச்சிகளையெல்லாம் கட்டுப்படுத்திக்கொண்டு, கம்பி இடைவெளியில் கை நுழைத்து பாலுவின் கண்ணீரைத் துடைத்தேன். பாலு என் கையை எடுத்துவிட்டுச் சிரித்தார், வாய்விட்டுச் சிரித்தார்.

“என்ன பாலு... என்ன இது?”

"தியாகு, என்ன நினைத்தாய்? சொல்... நம் பாலு கடைசி நேரத்தில் கோழையாகி விட்டான் என்றுதானே? இந்தச் சூரியனை நாளை நான் பார்க்க முடியாது. அதை எண்ணிக் கலங்கி விட்டேன் என்றுதானே நினைத்தாய்? உண்மையைச் சொல்''.

'இல்லை பாலு, நீயே சொல்''.

"தியாகு, இப்போதும் சொல்கிறேன். நான் சாவைக் கண்டு பயப்படவில்லை. தூக்கில் தொங்குவது பற்றி அச்சமில்லை”. 

“அது எனக்குத் தெரியும் பாலு"

"பிறகேன் இப்படி அழுதாய் என்று கேள்”.

"சொல் பாலு".

"உன் மேல்தான் தியாகு எனக்கு வருத்தம்".

"ஏன்?"

"கடைசிக் காலத்தில் எனக்கு ஒரு லட்சியத்தைக் கொடுத்து விட்டாயே என்றுதான்”.

"முன்பே சொன்னேன்...”

"இல்லை தியாகு, நீ ஒன்றும் சொல்ல வேண்டாம். இதை நினைத்து நினைத்துதான் நான் வருத்தப்படுகிறேன். எப்படியும் வாழலாம் என்று வாழ்ந்து கொண்டிருந்தவன் நான். அப்போது இந்தச் சாவு வந்திருக்கக் கூடாதா? இப்படித்தான் வாழ வேண்டும் என்று உன்னிடமிருந்து கற்றுக் கொண்டேன். அப்படி வாழ முடியாமல் சாவு குறுக்கிடுகிறதே என்ற கவலைதான் என்னை வாட்டுகிறது தியாகு. எவ்வளவு முயன்றும் என்னால் இந்தச் சிந்தனையிலிருந்து விடுபட முடியவில்லை”.

பாலுவின் கண்களில் மீண்டும் கண்ணீர்ப் பெருக்கு. துடைத்து விடும்போது என் கண்கள் ஈரமாகி இரண்டே இரண்டு துளிக் கண்ணீர், எச்சரிக்கையாகி, பாலு பார்ப்பதற்கு முன் துடைத்து விட்டு, இயல்பாய்ப் பேச முற்பட்டேன்.

பாலு என்னைப் பேச விடவில்லை.

''தியாகு, எனக்கு ஒரு சந்தேகம்'.

''கேள்”.

"மறுபிறப்பு என்கிறார்களே... அது உண்மையா?" 

“என்ன பாலு, இப்படிக் கேட்கிறாய்? அதெல்லாம் பொய், சுத்தப் பொய்”.

“அது எனக்குத் தெரியும். ஆனால் ஒரு ஆசை, அப்படி ஒன்று இருக்கக் கூடாதா?"

''ஏன்?''

"மறுபிறப்பு இருக்குமானால், அந்த மறுபிறப்பில் நான் உன் பிள்ளையாகத்தான் பிறப்பேன். நீ என்னை மீண்டும் ஒரு பாலகிருஷ்ணனாகவே வளர்த்தெடுக்க வேண்டும். என்னை எப்படி வளர்க்க நினைத்தாயோ, அப்படி"

எனக்குப் பேச வார்த்தைகள் இல்லை. வார்த்தைகள் என்ன, வாயசைக்கும் திறனே இல்லை. பாலுவின் கைகளை இறுகப் பற்றி அழுத்திக் கொண்டு அப்படியே சிறிது நேரம் அமைதியாக நின்றேன். கைகள் வழியே அவருக்கோர் உறுதி கொடுத்தேன் என்று அவர் புரிந்து கொண்டார் போலும். முகம் மலர்ந்து சிரித்தார். சிரித்த முகம் மாறுமுன் விடைபெற எண்ணினேன். மெல்லக் கைகளை விடுவித்துக் கொண்டு, நான் கையசைக்க, அவரும் கையசைக்க... மௌனமாய் விடைபெற்று, விருட்டென்று திரும்பி வேகமாய்க் கண்டத்தை விட்டு வெளியே வந்தேன். வாசலைத் தாண்டியதும் கீழே உட்கார்ந்து கைக்குள் முகம் புதைத்து அழுது தீர்த்தேன்.

அந்தநாள் - சிறை முழுவதையும் சோகம் அப்பிக்கிடந்தது. சிறைக் கைதிகள் அனைவரும் மௌனமாய் அழுதுகொண்டிருந்தனர். தொழிலகங்கள் மூடிக் கிடந்தன. வேலை செய்யவோ, செய்யச் சொல்லவோ யாருமில்லை.

தூக்குமேடை (சக்கி) சிறை வாயிலுக்குப் பக்கமாய் பழைய கண்டத்துக்குப் பின்னால் இருந்தது. பாலகிருஷ்ணனை அன்று மாலையே சி.பி. கண்டத்திலிருந்து பழைய, கொண்டுவந்து அடைத்து, நாளை விடியற்காலையில் பழைய கண்டத்துக்குக் கண்டத்திலிருந்து சக்கிக்குக் கொண்டு செல்வார்கள் என்று கேள்விப்பட்டோம்.

அன்றுமாலை ‘லாக்கப்' நேரத்தில் நல்ல மழை. பாலகிருஷ்ணனை சி.பி. கண்டத்திலேயே பூட்டி விட்டார்கள். இரவு 7.30 சுமாருக்கு மழை விட்டது. 8 மணி சுமாருக்கு காவலர் படை சூழ ஜெயிலர் சி.பி. கண்டத்துக்குச் சென்று பாலகிருஷ்ணனின் அறையைத் திறக்கச் செய்தார். திறந்தவுடன் ஒரு காவலர் கைவிலங்குடன் பாலுவை நெருங்கினார். பாலகிருஷ்ணன் சொன்னார்:

“வேண்டாம்... எனக்கு விலங்கு போடாதீர்கள். காலையில் சக்கிக்குப் போகும் போதுதான் போடவேண்டும் என்று சட்டம்”.

ஜெயிலர் அதை ஏற்றுக் கொண்டார். பாலகிருஷ்ணன் சொன்னார்:

“காவலர்கள் சற்று விலகியே நிற்கட்டும். யாரும் என்னை நெருங்கி வருவதோ என்மேல் கை வைப்பதோ எனக்குப் பிடிக்காது. நான் ஓடிப்போகாமல் பாதுகாப்பதுதான் நோக்கம் என்றால், என்னைச் சுற்றி வளையமாக வந்தால் போதுமே?"

சொல்லிவிட்டுச் சிரித்தார். தப்பிச் செல்வதா? அந்தச் சூழலில் அந்த இடத்திலிருந்தா? வேடிக்கையான கற்பனைதான்! ஜெயிலர் அதை ஏற்றுக்கொண்டு காவலர்களை விலகி நிற்கச் செய்தார்.

பாலகிருஷ்ணன் ஒவ்வொரு கொட்டடியாகச் சென்று கண்டத்து நண்பர்கள் ஒவ்வொருவரிடமும் கைகுலுக்கி விடை பெற்றார் - பிரியா விடையன்று. நிரந்தரமாய்ப் பிரியும் விடை. பிறகு தன் கொட்டடி வாயிலில் நின்று முழக்கங்கள் எழுப்பினார்: 

"சிறைப்படுத்தப்பட்டோர் நலவுரிமைச் சங்கம் -வாழ்க!
அதிகார வர்க்கத்தின் அடக்குமுறை - வீழ்க!
சிறைப்படுத்தப்பட்டோர் ஒற்றுமை - ஓங்குக! 
ஒன்றுபடுவோம், போராடுவோம், வெற்றி பெறுவோம்! 
செங்கொடி - வாழ்க!”

இரவு நேரத்துக்கும் காற்றில் நிலவிய ஈரப் பதத்துக்கும் சிறையைக் கவ்வியிருந்த கனத்த மௌனத்துக்கும், பாலுவின் முழக்கங்கள் எங்கள் மெயின் கண்டத்துக் கொட்டடிகள் வரை கேட்டன. உண்மையில் அவை சிறை முழுக்கக் கேட்டிருக்க வேண்டும். முழக்கம் எழுப்பிக் கொண்டே பாலு கண்டத்தை விட்டு வெளியே வர, சி.பி. பகுதியில் வைக்கப்பட்டிருந்த கம்யூனிஸ்டுக் கட்சித் தோழர்கள் (விலைவாசிப் போராட்டக் கைதிகள்) முழக்கம் எழுப்பலானார்கள்:

“வீர வணக்கம், வீர வணக்கம் - தோழர் பாலு, வீர வணக்கம்!”

இன்னும் பல முழக்கங்கள், பாலு சி.பி. வாயிலைத் தாண்டும் வரை இந்த முழக்கங்கள் கேட்டன. பிறகு மறுபடியும் பாலுவின் முழக்கங்கள் அவர் இரண்டாம் தொகுதிக்கு நேராக வரும்போது, தொகுதிக்குள் அடைபட்டிருந்த கைதிகள் முழக்கம் எழுப்பத் தொடங்கினார்கள்.

"சிறைப்படுத்தப்பட்டோர் நலவுரிமைச் சங்கம் - வாழ்க!”
அதிகாரவர்க்க அடக்குமுறை - வீழ்க!'
வீர வணக்கம், வீர வணக்கம்-எங்கள் பாலு, வீர வணக்கம்!"

முழக்கங்கள் காற்றினும் கடிதாய்த் தொகுதி தொகுதியாகப் பரவி, சிறைக் கைதிகள் அனைவரும் இதேபோல் முழக்கங்கள் எழுப்பத் தொடங்கினார்கள்.

இந்த முழக்கங்கள் ஓய்ந்தபோது, மீண்டும் பாலுவின் குரலில் முழக்கங்கள் கேட்டு ஓய்ந்தன. அவர் பழைய கண்டத்துக்குப் போய்ச் சேர்ந்துவிட்டார் என்று புரிந்தது.

இரவு பத்து மணி சுமாருக்கு பாலுவிடமிருந்து ஒரு வாய் மொழித் தகவலும் ஒரு துண்டுக் கடிதமும் எங்களுக்கு வந்து சேர்ந்தன. வாய்மொழித் தகவல் - எங்களைத் தைரியமாக இருக்கச் சொல்லி! துண்டுக் கடிதத்தில் தன் இறுதி விருப்பத்தை எழுதியிருந்தார் - முறையாகச் சொன்னால் அதுதான் அவரது உயில். சிறைக்கு வந்தபின் தன்னுள் விதைக்கப்பட்ட சமூக உணர்வு. அதன் வளர்ச்சியில் ஏ.ஜி.கே.யும் நாங்களும் வகித்த பங்கு. அவரது அந்த ஒரே வருத்தம், செங்கொடி போர்த்தித் தொழிலாளி வர்க்கத்தினரால் தன் உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்ற ஆசை... யாவற்றையும் அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தார். அதே கடிதத்தை நகல் எடுத்துச் சிறை அதிகாரிகள் வாயிலாக அரசுக்கும் குறிப்பிட்ட சில அரசியல் தலைவர்களுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் என் அக்காள் காந்திக்கும் அனுப்ப அதிகாரிகளைக் கேட்கும்படி பதில் சொல்லி அனுப்பினோம். அவ்வாறு செய்து முடித்துவிட்டுத் தூங்கப் போய்விட்டார் என்று இரவு 12 மணிக்குத் தகவல் கிடைத்தது.

செப்டெம்பர் 25 - விடியற்காலை 4.30 சுமாருக்கு பாலகிருஷ்ணனை உறக்கத்திலிருந்து எழுப்பி விட்டார்கள். அதிலிருந்து இறுதிச் சடங்குகள் ஆரம்பமாகிவிட்டன. உயிருடன் இருக்கும்போதே இறுதிச் சடங்குகள்!

காலைக் கடன்கள் யாவற்றையும் அதற்குள்ளேயே முடித்துக் கொள்ள வேண்டும். பிறகு அறைக்குள்ளேயே வெந்நீர்க் குளியல், பிறகு புத்தாடை அணிய வேண்டும் - கைதிச் சீருடைதான்.

“கடவுள் வழிபாடு, பூசை ஏதாவது செய்ய விரும்புகிறாயா?” 

“இல்லை... எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை” 

“ஏதாவது மதகுருமார் உதவி வேண்டுமா?”

"வேண்டாம். எனக்கு மதம் இல்லை”

"கடைசியாக ஏதாவது சாப்பிட விரும்பினால் கேள்".

“வேண்டாம், எதுவும் தேவையில்லை”.

“பால், ரொட்டி"

"பால் மட்டும் போதும். சர்க்கரை கொஞ்சம் தூக்கலாக, அதுதான் எனக்குப் பிடிக்கும்".

பால் குடித்து முடித்தார் பாலு. கண்காணிப்பாளர் கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டு நின்றார், கொஞ்ச நேரம் இருந்தது. பாலு அறைக்குள்ளேயே அமர்ந்து கொண்டார். காவலர்களும் தண்டனைக் காவலர்களும் கம்பியோரம் வந்து பாலுவைப் பார்த்துச் சென்று கொண்டிருந்தார்கள்.

மரண தண்டனை நிறைவேற்ற ஆணையில் தூக்கிலிட வேண்டிய நாள் குறிக்கப்பட்டிருக்குமே தவிர, நேரம் குறிக்கப்பட்டிருக்காது. குறிப்பிட்ட நாளில் விடிந்தவுடன் எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் தூக்கிலிட வேண்டும் என்பது சிறை விதி. ஆனால், விடிந்தும் விடியாத நேரத்தில் தூக்கிலிடுவதுதான் நடைமுறை.

சரியாகக் காலை 5.30 உயிரோடு பாலுவின் இறுதிப் பயணம் தொடங்கிற்று. அறைக்குள்ளேயே அவருக்கு விலங்கு பூட்டினர். கைகளை முதுகுக்குப் பின்னால் வைத்து விலங்கிட்டனர். முகத்தை மறைக்கும் கறுப்புத் துணியுடன் கூடிய கறுப்புக் குல்லாய் மாட்டப் பட்டு, அப்போதைக்கு முகம் திறந்து வைக்கப்பட்டது.

பழைய கண்டத்துக்கும் சக்கிக்கும் இடையே சில அடி தூரம்தான். அந்தத் தொலைவுக்குள் பாலு முழக்கங்கள் எழுப்பியபடி நடந்தார் - இரவு எழுப்பிய அதே முழக்கங்கள்:

“சிறைப்படுத்தப்பட்டோர் நலவுரிமைச் சங்கம் - வாழ்க! 

செங்கொடி வாழ்க!'

திடீரென்று சத்தம் நின்றது. சக்கி வாசலில் அவர் நிறுத்தப் பட்டார். கண்காணிப்பாளர், ஜெயிலர், மாவட்ட மருத்துவ அதிகாரி, சிறை அதிகாரி, சிறை மருத்துவர்கள், நிர்வாக நடுவர் என்ற முறையில் வட்டாட்சியர், மற்றும் பல அதிகாரிகளும் காவலர்களும் குழுமியிருந்தார்கள். கடைசி நேரத்தில் தப்புவதற்கோ, கைதியை மீட்டுச் செல்வதற்கோ முயற்சி நடந்தால் முறியடிப்பதற்காக, சக்கியறையின் முன்பக்கம் பத்துக் காவலர்கள் துப்பாக்கி சகிதம் ஆயத்தமாய் நின்றார்கள்.

மரண தண்டனை நிறைவேற்ற ஆணையைக் கண்காணிப்பாளர் ஆங்கிலத்தில் படித்தார், ஜெயிலர் அதைத் தமிழில் மொழிபெயர்த்துச் சொன்னார். பிறகு அலுவலகத் தலைமைக் காவலர் நம்பியாரிடம் ஜெயிலர் ஏதோ சைகை செய்தார்.

நம்பியார் இந்தச் சைகையைப் புரிந்து கொண்டார். தூக்கிலிடு வதற்கு முன் கைதியின் அங்க மச்ச அடையாளங்களை (Idedntifiocation Marks) கண்காணிப்பாளரும் ஜெயிலரும் சரிபார்த்து இவர்தான் அவர் என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று சிறை விதி. நம்பியாருக்கும் இந்த விதி தெரியும்.

பாலகிருஷ்ணன் நிற்பது சக்கி வாசல் - உருக்கொத்த உள்ளங்களைக் கூடப் பஞ்சாக்கிப் பறக்க வைக்கும் வாசல், உண்மையிலேயே மரண வாசல், சக்கி வாசலில் நிறுத்தி பாலகிருஷ்ணன்தான்
பாலகிருஷ்ணனா என்று சரிபார்க்கப் போகிறார்கள். இவர் அவரல்ல என்று தெரிந்து, விட்டு விடுவார்களோ?

பாலுவை நெருங்கிய நம்பியார் ஒரு மச்சத்தைத் தேடி சட்டடையைத் தொட்டதுதான் தாமதம், ஒங்கி எழுந்தது பாலுவின் குரல்:

“மச்ச அடையாளமாவது, மண்ணாங்கட்டி அடையாளமாவது? நான்தான் பாலகிருஷ்ணன், அடிச்சுத் தூக்கியெறி..."

நம்பியார் அரண்டு போய்ப் பின்வாங்க, கண்காணிப்பாளர் - ‘அதுபோதும்’ என்று சைகை செய்து விட்டார்.

பாலுவின் முகம் மூடப்பட்டு சக்கி வாசல் திறக்கப்பட்டது. தூக்குக் கைதி தூக்கு மரத்தைப் பார்க்கக் கூடாது என்று விதி. பாலு தூக்கு மேடையில் நிறுத்தப்பட்டார். மூத்த காவலர் ஒருவர் அவசரமாய் அவரைச் சரியான இடத்தில் நிறுத்தி, கைகள் அசையாதபடி சேர்த்துப் பட்டைக் கட்டுக் கட்டினார். அதேபோல் கணுக்கால்களையும் சேர்த்துப் பட்டைக் கட்டுக் கட்டினார். அதேபோது மற்றொரு காவலர் சுருக்குக் கயிற்றை கழுத்தில் மாட்டி சற்றே இறுக்கிச் சரியான நிலையில் வைத்தார்.

மற்றொரு தலைமைக் காவலர் (இவர்தான் executioner - தூக்கிலிடுபவர்) 'லீவரில்' கை வைத்துத் தயாராய் நின்றார். கண்காணிப்பாளரின் விரல் அசைவுக்காக அவர் காத்திருந்தார். (இந்த லீவர் என்பது இரயில் நிலையங்களில் கைகாட்டி மரத்தை இயக்குவதற்குள்ள லீவரைப் போலவே இருக்கும்).

இவ்வளவுக்கும் ஒரு நிமிடம்கூட ஆகாது. சில விநாடிகள்தான். தூக்கு மேடையில் நிறுத்தப்பட்டவுடனே பாலு முழக்கம் எழுப்பினார்:

"செங்கொடி - வாழ்க!

செங்கொடி - வாழ்க!'

இரண்டு முறை ஆயிற்று. மூன்றாவது முறை பாதி முழக்கம் தான் முடிந்திருந்தது.

“செங்கொடி - ... "

கண்காணிப்பாளரின் விரலசைவுக்குத் தலைமைக் காவலர் 'லீவரை' இழுக்க, மேடைக் கதவுகள் இரண்டும் சட்டென்று கீழ்வாங்க... 'பொடக்’... ஐயகோ! எல்லாம் முடிந்து போயிற்று. பாலுவின் முழக்கங்கள் எங்களுக்குத் துல்லியமாகக் கேட்டுக் கொண்டிருந்ததால், அந்த முடிவை உடனே எங்களால் தெரிந்து கொள்ள முடிந்தது.

லெனினும் நானும் அவரவர் கொட்டடிகளில் பிரமை பிடித்தாற் போல் உட்கார்ந்திருந்தோம். எங்களை அறியாமலே கண்ணீர் பெருகிக் கொண்டிருந்தது. திறந்துவிடப்பட்ட பின் மற்ற தோழர்கள் வந்து எங்களுக்கு ஆறுதல் சொல்லி வெளியே அழைத்து வந்தார்கள்.

விதிப்படி பாலுவின் உடல் அரை மணி நேரம் தூக்குக் கிணற்றுக்குள் தொங்கிக் கொண்டிருந்தது. பிறகு மருத்துவ அதிகாரி ‘உயிர் இருக்கிறதா?' என்று பரிசோதித்து 'உயிர் போய்விட்டது' என்று சான்றளித்தபின், சடலம் எடுக்கப்பட்டு சக்கியறையில் கிடத்தப்பட்டு, சிறிது நேரம் கழித்து பாலுவின் தந்தையிடம் ஒப்பம் பெற்று ஒப்படைக்கப்பட்டது.

இரயில்வே தொழிலாளர்களும் இதர பிரிவுத் தொழிலாளர்களுமாக நூற்றுக்கணக்கில் திரண்டு வந்து, பாலு விரும்பியபடியே அவர் உடலுக்குச் செங்கொடி போர்த்தி, சடல வண்டியிலும் செங்கொடிகள் கட்டி ஊர்வலமாய்க் கொண்டுசென்று பொன்மலை அருகே அடக்கம் செய்தார்கள்.

தோழர் பாலகிருஷ்ணன் தூக்கிலிடப்பட்டதோடு என் சிறை வாழ்க்கையில் கிட்டத்தட்ட கால் பங்கு முடிவுறுகிறது.

ஆனால், என் சிறை வாழ்க்கை முழுவதிலும் பாலுவின் வீர நினைவுகள் என்னைத் தொடர்ந்து இயக்கின. அதன் பிறகும்கூட நான் செய்கிற ஒவ்வொன்றிலும் - இலட்சியப் பயணத்தில் நான் எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியிலும் - என் பாலுவின் சுவடுகள் பதிவதாகவே எண்ணிக் கொள்கிறேன்.

எண்பதுகளில் திருச்சி மத்திய சிறையில் நாங்கள் நடத்தி வந்த ‘சுதந்திர தாகம்' என்ற மாதமிருமுறைக் கையேட்டில் பாலுவைப் பற்றித் தோழர் லெனின் ஒரு கட்டுரை எழுதினார். அதற்குத் தலைப்பு தரும்படி என்னைப் பணித்தார். நான் கொடுத்த தலைப்பு: "அந்தியில் உதித்த ஆதவன்!”

சிறையிலிருந்து விடுதலையான பின் நான் எழுதி வெளிவந்த முதல் நூல்: நெல்சன் மண்டேலா - சிறையிலும் வாடாத கறுப்பு மலர் பாலகிருஷ்ணன் வீர நினைவுக்குச் சமர்ப்பணம் செய்தேன்.

பாலுவுக்காகக் கண்ணீர் விட்டு அழுதவன் நான். பாலுவைப் பற்றி சொல்லக்கேட்டு அழுதவர்கள் பலர் உண்டு. இவ்வளவு காலத்துக்குப் பிறகும் எப்போதாவது பாலுவின் நினைவுகள் என் கண்ணீரைக் கேட்பதுண்டு. ஆனால், உறுதியாக ஒன்றைச் சொல்வேன். அந்த உண்மை வீரனுக்கு உண்மையான அஞ்சலி - கண்ணீர் அல்ல! ஒடுக்குமுறையை நொறுக்குதல்! உரிமை, விடுதலை! அவற்றை நோக்கிய போர்ப் பயணம்!

---------------------------------------------------------

ம் - ஷோபா சக்தி:

பனைத் தீவு:

கிறிஸ்துவுக்குப் பின் ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பத்து இரண்டாம் வருடமும் டிசம்பர் மாதத்தின் ஒரு பனிக்காலச் சாமத்தில் கடவுளின் குமாரன் அந்தப் பனைத் தீவில் பிறப்பதற்கு ஏற்பாடாகியிருந்தது. வட சமுத்திரத்தில் அலைந்துகொண்டிருக்கும் ஏழு சின்னத் தீவுகளில் ஒல்லாந்துக் கடற்கோட்டையிலிருந்து அரைக் கடல் மைல் எட்டத்தில் மிதந்த பனைத்தீவில் மீட்பனின் வருகைக்காகப் பெருத்த ஆரவாரத்துடன் கன்னிமரியாளின் பீடத்தைச் சனங்கள் அலங்கரிக்கலானார்கள்.

முன்பெல்லாம் ஏசுபாலனின் பிறப்பைச் சோடனை செய்வதற்காக அதிகாலையிலேயே ஒரு கூட்டம் இளைஞர்கள் தோணிகளில் காரைதீவு கசுரினா கடற்கரைக்குப் புறப்பட்டுப் போவார்கள். கசுரினா கடற்கரையில் வரிசையாக நிற்கும் சவுக்கம் மரங்களின் கொப்புகளைத் தறித்துத் தோணிகளில் கட்டி பனைத்தீவுக்கு இழுத்து வருவார்கள். அந்தச் சவுக்கம் கொப்புகளை அச்சு அசலாக நத்தார் மரங்களைப் போலவே நுட்பத்துடன் சிதைத்துப் பாலன் கூட்டையும், ஆலயத்தின் தூண்களையும், வெண்ணிறச் சுவர்களையும் அலங்கரிப்பார்கள். இப்போதெல்லாம் காரைதீவுக்குள்ளேயே போக முடியாதபடி இலங்கைக் கடற்படையின் தளம் - இங்கே 26, 27 மற்றும் 34வது படையணிகள் நிலைகொண்டிருக்கின்றன - காரைதீவுக்குள் மெல்ல மெல்ல விரிந்து இறுதியில் சவுக்கம் மரங்களையும் விழுங்கிக் கொண்டது.

பாலன் கூடு:

இந்த வருடம் தீவின் அரசாங்கப் பாடசாலையைச் சூழக் காடு பற்றிக் கிடந்த செவ்வரளிப் புதர்களிடையே புகுந்த இளைஞர்கள் செவ்வரளிக் கொப்புகளை வெட்டி வந்து வனைந்தார்கள். மண்குழிக் குட்டையில் வெட்டிப் பெயர்த்தெடுக்கப்பட்ட பசும்புற்கள் பாளம் பாளமாகப் பாலன் கூட்டினுள் அடுக்கப்பட்டன. ஒரு மெல்லிய வைக்கோல் கற்றை பாலன் கூட்டின் உள்ளும் புறமுமாகப்
பிய்த்தெறியப்பட்டது. பலூன்களாலும் சிறிய மின்குமிழ்களாலும் செவ்வரளிக் கொப்புகள் ஆபாசமாகச் சோடிக்கப்பட்டன. பின் பாலன் கூட்டின் உச்சியில் சம்மனசானவரைச் சணல் கயிற்றில் கட்டித் தொங்கவிட்டார்கள். கன்னிமரியாள் பொம்மையும், சூசையப்பு பொம்மையும் பாலன் கூட்டினுள் வைக்கப்பட்டன. வெற்றுத் தேயிலை பெட்டி, அலுமினியத் தாளில் வெட்டப்பட்டிருந்த வால் நட்சத்திரம் மரியாளுக்கும் சூசையப்புவுக்கும் நட்டடுவாகக் குத்திட்டு இறங்க வால் நட்சத்திரத்தின் பின்னால் வந்து சேர்ந்த கீழ்த்திசை இராசாக்கள் மூவரும் தங்கள் பொக்கிசங்களைத் திறந்து பொன்னையும், தூபவர்க்கத்தையும், வெள்ளைப் போளத்தையும் காணிக்கையாக்கினார்கள்.

மெசியா:

விழாக் காலங்களில் தேவாலயத்தைச் சூழவும் தொங்க விடப்படும் நிறங்கள் ஒளிரும் வெளிச்சக் கூடுகளைக் கடந்த நான்கு வருடங்களாகவே தமிழீழத்தின் சட்டம், ஒழுங்கு நீதி ஆகியன பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் சிறிலங்காவின் முப்படைகளிடமும் கையளிக்கப்பட்டதிலிருந்து சனங்கள் அவித்து விட்டிருந்தார்கள். அந்தத் தீவைச் சதா காலமும் சுற்றித் திரியும் கடற்படைப் படகுகள் பெரும் வெளிச்சங்களைக் கண்டால் தீவுக்குள் நுழையக்கூடும் என அவர்கள் அச்சமுற்றிருந்தார்கள். ஒரு தெந்தெட்டான வெளிச்சத்தில் தான் மெசியா இன்று பிறக்கப்போகிறார்.

பலிப்பூசையின் ஆயத்த மணிகள் கிளர்த்தப்படலாயின. தொடர்ந்து மரியாயின் சேனை வருகைப் பாடலைப் பாடியது. அந்தப் பாடலின் மெட்டு ஒரு பிரபலமான சிங்கள பைலாப் பாடலின் மெட்டிலிருந்து திருடப்பட்டிருந்தது. பின்பு பாதிரி பிரசங்கிக்கத் தொடங்கினான். அந்தப் பாதிரி நடுத்தர வயதுள்ளவனாகக் காணப்பட்டான், அவன் ஒல்லியாகவும் தேகத்தில் சுண்டினால் இரத்தம் கன்றும் நிறமாகவும் இருந்தான். சிரைக்க மழிக்கப்பட்டிருந்த அவனது செக்கச் செவேலென்ற சிறிய மூஞ்சி பலிப்பீடத்தில் எரிந்துகொண்டிருக்கும் மெழுகுவர்த்திகளின் ஒளியில் சுவாலையாய்க் கனல்கிறது. அவன் உருவேறி சனங்களுக்கு ஆவேசத்துடன் பிரசங்கித்தான்.

பிரசங்கம்:

பாதிரிகள் இப்போதெல்லாம் சிலேடை, அங்கதம் இரட்டைக்கிளவி, இடக்கரடக்கல் எனத் தமிழ் மொழியின் எல்லாப் பொற்பங்களையும் பிரயோகித்துப் பிரசங்கிக்கத் தொடங்கிவிட்டார்கள். 'இது என்னே ஒரு முக்கியமான காலம்! தொலைவில் வெளிச்சம் புள்ளியாய் ஒளிர்கிறது. அது பிரகாசிக்கட்டும்! இதோ எல்லா ஜனங்களுக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். பயப்படாதிருங்கள்! ஆயிரம் ஆண்டுகளாய் நாம் காத்திருந்த மீட்பர் தோன்றிவிட்டார். விடுதலைக்கான நாட்கள் நெருங்குகின்றன. புஜங்களிலே நுகத்தடியைக் காவித் திரியும் ஜனங்கள் எழுவீர்! அடிமையாய் கிடந்த நாட்கள் மறையும் என்று மெய்யிலும் மெய்யாகவே உங்களுக்குச் சொல்கிறேன்' இப்படியாக ஆரம்பத்திலிருந்தே சிலேடை பேசிய பாதிரி கதையோடு கதையாக ‘ஆண்ட பரம்பரை மீண்டும் ஒரு முறை ஆள நினைப்பதில் என்ன குறை' என்று காசி. ஆனந்தனின் உணர்ச்சி நறுக்கொன்றைத் தனது பிரசங்கத்துக்குள் சொருகிய கணத்தில் ஆலயத்தின் இடதுபுற வரிசைகள் கலையலாயின.

சிறி லும்பினி:

பாதிரி கண்களை மூடி மதுக்கோப்பையைத் தூக்கிக் காட்டி ‘இது உங்களுக்காகச் சிந்தப்படும் என் இரத்தம்’ என்ற போது தேவாலயத்தின் வலது புறத்தில் முழந்தாளிட்டு நின்றவர்களிடையே ஒரு செய்தி பரவியது ‘பள்ளதிக்கு பற்றி எரியுதாம்' பாதிரி அப்பத்தைப் பிய்த்தபோது ஆலயத்தின் இடதுபுறத்தில் யாரும் இருக்கவில்லை. அவர்கள் தெருக்களாலும் ஒழுங்கைகளுக்குள்ளாலும் தீ நாக்குகள் எழும் திக்கை நோக்கி அரற்றியவாறும் குழறியவாறும் ஓடிக் கொண்டிருந்தார்கள். வீட்டு வேலிகளையும் தோட்டக் காணிகளையும் தாண்டிக் குதித்து குறுக்கு வழிகளால் ஓடி வந்த இளைஞர்கள் தான் முதலில் வந்து சேர்ந்தார்கள். பவுத்த பாடசாலையான ‘சிறி லும்பினி வித்யாலாயா' பற்றி எரிந்துகொண்டிருந்தது.

தாவீது:

அந்தப் பவுத்த பாடசாலையைச் சூழவுள்ள குடிசைகளில் சீவிக்கும் இளைஞர்களில் பலரும், சில முதியவர்களும் இரவில் பாடசாலைக் கட்டடத்துள் படுப்பதுண்டு. இன்று எல்லோரும் நத்தார் பூசை காணக் கோயிலுக்குப் போயிருக்கையில் மிகவும் கவனமாகத் திட்டமிட்டுப் பாடசாலையைப் பற்ற வைத்திருக்கிறார்கள். இன்று தாவீதுக் கிழவர் மட்டும் தான் தட்டத் தனியனாகப் பாடசாலைக்குள் படுத்துக்கிடந்திருக்கிறார். அவரால் ஆலயம் இருக்கும் தொலைவுக்கு நடக்க முடியாது. அந்த நோயாளிக் கிழவரை இழுத்துவந்து பனை மரத்தோடு சேர்த்துக் கயிற்றால் கட்டிவிட்டுப் பாடசாலையை மண்ணெண்ணெய் ஊற்றிக் கொழுத்தியிருக்கிறார்கள்.

லாசர்:

தாவீதுக் கிழவர் நடுங்கிக் கிடந்தார். அவருக்குப் பேர நா எழுவதாய் இல்லை. வியர்வையில் பஞ்சைத் தேகம் நனைந்து கிடக்க அவர் கண்கள் பயத்தினுள் மறைந்திருந்தன. கரவெட்டி சிறி நாரதா பவுத்த பாடசாலை, அல்வாய் சேமஹே பவுத்த பாடசாலை, புத்தூர் பன்யாசீக பவுத்த பாடசாலை ஆகியவற்றைத் தமிழ்ப் போராளிகள் தாக்கினார்கள், தாக்க முற்பட்டார்கள் என்றெல்லாம் உண்மைகளும் வதந்திகளும் பரவிக் கிடந்த காலமது. ஆகவே இந்த பவுத்த பாடசாலையையும் யாராவது போராளிகளே கொழுத்தி விட்டுச் சென்றிருக்கலாம் என இளைஞர்கள் சந்தேகமுற்றனர். லாசர் தான் தாவீதுக் கிழவரைப் பிடித்து உலுக்கினான்.

புலிப்படை:

'சொல் தாவீது அப்பா யார் பள்ளிக்கூடத்தைக் கொழுத்தியவர்கள்? நீ அவர்களை அடையாளம் கண்டாயா? தங்களை அவர்கள் புலிப்படைப் பொடியள் என்று சொல்லிக் கொண்டார்களா?' கிழவர் அலங்க மலங்க விழிகளைப் புரட்டினார். புலிப்படைப் பொடியள் என்ற சொல்லையே தன் வாழ்நாளில் இப்போது தான் அவர் முதல் முறையாகக் கேட்டிருக்கக்கூடும். தாவீதுக் கிழவர் வாயினுள் ஏதோ முணுமுணுத்தார். லாசர் மறுபடியும் கேட்டான் ‘யார் புலிப்படைப் பொடியளா?' கிழவர் மெதுவாக வாயைத் திறந்தார் ‘இல்லை வெள்ளாம் பொடியள்'.

நயினா தவு புத்த விகாரை:

சடாரென ஒரு நிசப்தம் எழ பாடசாலையின் முகட்டுச் சலாகைகள் தீயில் சடசடவென ஒலியெழுப்பித் தெறித்து வீழ்ந்தன. இரண்டு இளைஞர்கள் இரவோடு இரவாகத் தோணியில் கிளம்பி செய்தியைச் சொல்ல நயினாதீவு புத்த விகாரைக்குப் போயினர். தண்ணீர் குடித்துவிட்டு தாவீதுக் கிழவர் சொன்னார் 'இரண்டு பேர் வந்து கொழுத்தினார்கள். அவர்களில் ஒருவனை என்னால் அடையாளம் காண முடியவில்லை. மற்றவன் ஏர்னஸ்ட் வாத்தியாரின் மகன். அந்த சுவாமிக்குப் படித்த பொடியன்'.

நேசகுமாரன்:

‘யார் நேசகுமாரனா? அந்தத் தாயோளித் தறுதலை முன்பும் ஒரு தடவை இறங்குதுறையில் வைத்து ஆமத்துறுக்களை மிரட்டியுள்ளான். அம்மட்ட சிறி அவனைக் கொத்தாமல் விடுவதில்லை' என செபரத்தினம் பதறினான். இளைஞர்கள் தண்ணீர் ஊற்றித் தீயை அணைத்துக்கொண்டிருக்க அவர்களில் இருவர் நேசகுமாரன் தான் தங்களது முதலாம் எதிரி என்பதாய் இரகசியம் பறைந்தார்கள். அவர்கள் எதிர்வரும் ஈஸ்டர் பண்டிகைக்கு முன்னதாய் நேசகுமாரனை வெட்டிச் சரிப்பதாகச் சபதம் செய்தார்கள். சிறி லும்பினி வித்தியாலாயா தணிந்த போது மீட்பர் பிறந்துவிட்டார் என்பதற்கு அடையாளமாகப் பனைத்தீவின் தோமையப்பர் ஆலயத்தில் ஊர்க் 'குடிமகன்' வைத்தியின் பறைமேளம் தட்டப்பட்டது.

---------------------------------------------------------



மேலதிக வாசிப்பு

வெர்ரியர் எல்வின் (வெர்ரியர் எல்வினும் அவரது பழங்குடிகளும்):

ஒரு தடவை, பஸ்தார் மாநிலத்தில், மரண தண்டணை விதிக்கப்பட்ட ஒரு மரியாவிடம், அவனைத் தூக்கிலிடும் முன்னால் "உன் கடைசி ஆசை என்ன?" என்று கேட்டார்கள். நகரத்துப் பாணியில் செய்யப்பட்ட சில சப்பாத்திகளும், மீன் குழம்பும் வேண்டும் என்று கேட்டான். அவனுக்கு அதைக் கொடுத்தார்கள், அதில் பாதியை அவன் மிகவும் அனுபவித்துச் சாப்பிட்டான். மீதம் உள்ளதை ஒரு இலையில் சுருட்டி, ஜெயிலரிடம் கொடுத்து, "எனது மகன் சிறைக் கதவுக்கு அந்தப்புறம் காத்திருக்கிறான், அவன் இதுநாள்வரை இப்படிச் சுவையான உணவைச் சாப்பிட்டதில்லை. அவன் இப்போதாவது இதைச் சாப்பிடட்டும்" என்று சொன்னான்.

அதுதான் வறுமை.
---------------------------------------------------------

எவ்கனி ஜாமியாடின் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதம்:

தனது படைப்புகளும் சிந்தனை சுதந்திரமும் இலக்கியத் தகுதியற்ற தணிக்கையாளர்களால் தாக்குதல்களுக்கும் தணிக்கைகளுக்கும் உட்படுத்தப்படுவது குறித்து எழுதினார்:

"எனது குழந்தைகள் மோசமான உடை உடுத்திக்கொண்டு தெருவிற்குள் வரும் போது எனக்கு வேதனை ஏற்படுகிறது. ஒரு மூலையிலிருந்துகொண்டு பொறுக்கிகள் அவர்கள் மீது கற்களை எறியும் போது நான் துவண்டுவிடுகிறேன். அறுவை சிகிச்சை மருத்துவர் கிடுக்கிகளுடன் அவர்களை நெருங்கும் போது, அவர் அவர்களுக்குப் பதிலாக எனது உடலை வெட்டிவிடுவதையே விரும்புவேன் என்று நினைக்கிறேன். எனது புத்தகங்களே எனது குழந்தைகள், எனக்கு வேறு குழந்தைகள் இல்லை. என்னென்ன ரசாயனச் சேர்க்கைகளால் டைனமைட் உருவாக்கப்பட்டுள்ளதோ அதே ரசாயனச் சேர்க்கைகளால் ஆனவைதான் எனது புத்தகங்களும். வேறுபாடு என்னவென்றால் டைனமைட் ஒரேமுறைதான் வெடிக்கிறது. ஒரு புத்தகமோ ஓராயிரம் முறைகள் வெடிக்கும். முதல் புத்தகம் எப்பொழுது எழுதப்பட்டதோ அன்றுதான் மனிதனின் குரங்கு நிலை முற்றுப் பெற்றது. அவன் குரங்கைத் தோற்கடித்தான். குரங்கு அதை இன்றுவரை மறக்கவில்லை; அதனிடம் ஒரு புத்தகத்தைக் கொடுத்துப்பாருங்கள்- உடனடியாக அதை நாசம் செய்யும், கிழித்தெறியும், அசிங்கப்படுத்தும்."

தன் மனைவியுடன் நாட்டைவிட்டு வெளியேறிச் செல்வதற்காக அனுமதி கேட்டு ஸ்டாலினுக்கு அவர் எழுதிய கடிதம் அவரது நெஞ்சுரத்துக்கு சான்று:

"எனது பெயர் அநேகமாக உங்களுக்குத் தெரிந்திருக்கும். எழுத்தாளனாகிய என்னைப் பொறுத்தவரை எழுதும் வாய்ப்புப் பறிக்கப்பட்டிருப்பதானது மரண தண்டனையை விடக் குறைந்ததல்ல... எவ்விதக் குற்றமும் இழைக்காமல் ஊறு விளைவிக்கப்பட்டிருப்பவன் நான் என்ற சித்திரத்தை உங்கள் முன் நான் வைக்க விரும்பவில்லை... ஒரு தருணத்தில் எதைப் பேசுவது சௌகரியமானதோ அதைவிடுத்து உண்மையைப் பேசுகின்ற மிகவும் அசௌகரியமான பழக்கம் என்னிடம் உள்ளது என்பதை நான் அறிவேன்... சோவியத் குற்றவியல் சட்டத்தில் மரண தண்டனைக்கு அடுத்தபடியானது குற்றவாளியை நாடுகடத்துதல். உண்மையில் நான் தண்டனை பெறத்தக்க குற்றவாளியாக இருப்பேனாயாகில், இலக்கிய மரணம் என்ற அவ்வளவு கடுமையான தண்டனையைப் பெறவேண்டியவன் நான் என்று கருதவில்லை. எனவே இந்த மரண தண்டனையை சோவியத் யூனியனிலிருந்து நாடு கடத்தப்படும் தண்டனையாக மாற்றுமாறும் என்னுடன் செல்ல என் மனைவிக்கு அனுமதி வழங்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்."

---------------------------------------------------------

எப்போதும் வாழும் கோடை - மனுஷ்ய புத்திரன்

சமீபத்தில் கவிஞர் வைரமுத்து அவர்கள் வெளியிட்ட பிரகடனம் அவருடைய ரசிகப் பெருமக்களில் ஒரு சிலரையேனும் பெரும் துக்கத்தில் ஆழ்த்தியிருக்கக் கூடும்.

“கவியரசுப் பட்டத்தைத் துறக்கிறேன்; கண்ணதாசனின் காலடிக்கே அதைக் காணிக்கையாக்குகிறேன்.”

அவரது குரலில் இருந்த புனிதத் துக்கமும் பெருமிதமும் வனவாசத்திலிருந்து திரும்பிய இராமனிடம் அவனது காலணிகளையும் அரியாசனத்தையும் ஒப்படைத்துச் சென்ற பரதனின் பெருமிதத்திற்கு நிகரானவை. வைரமுத்துவும் நானும் தமிழ் என்ற ஒரு மொழியில் கவிதை என்ற ஒரு வடிவத்திற்குள் இயங்குபவர்கள் என்ற முறையில் மிகுந்த சங்கடத்திற்கு ஆளானேன். பாரதியின் கோட்டுச் சித்திரங்களின் இருப்பை அடைவதற்காக இடைவிடாத உடல் பயிற்சியிலும் குரல் பயிற்சியிலும் ஆழ்ந்திருக்கும் வைரமுத்துவின் நாடகத்தோற்றங்களை விட அவர் கவியரசு ஆன விதமும் அதைத் துறந்திருக்கும் விதமும் ஏற்படுத்தும் சங்கடம் மிகக் கடுமையாக இருக்கின்றன. கூடவே தமிழில் முன்னர் ஒரு கவி தன்னைக் கவியரசுவாகப் பிரகடனப் படுத்திக்கொண்ட சூழல் நினைவுக்கு வந்தது.

தாழ்வுற்று வறுமை மிஞ்சிய ஒரு நிலையில், "ஸ்ரீ எட்டையபுரம் மகராஜ ராஜேந்திர ஸ்ரீ வெங்கடேசு ரெட்டப்ப பூபதி அவர்கள் சமூகத்துக்குக் கவிராஜ ஸ்ரீ சி.சுப்பிரமணிய பாரதி எழுதிய ஓலைத் தூக்கு” பின்வருமாறு சொல்கிறது.

புவியனைத்தும் போற்றிடவான் புகழ்படைத்துத் 
தமிழ்மொழியைப் புகழி லேற்றுங்
கவியரசர் தமிழ்நாட்டுக் கில்லையெனும் 
வசையென்னாற் கழிந்த தன்றே!

ஆட்சி அதிகாரத்திற்கும், செல்வத்தின் அதிகாரத்திற்கும் முன் கவிதையின் அதிகாரம் தாழ்ந்துபோய்விடாதிருக்கக் கவியரசு என்ற பட்டத்தைச் சூடிக்கொண்ட ஒருவனுக்கும் செல்வாக்கு மண்டலங்களுடனான கண்ணாமூச்சி ஆட்டத்தில் தன் இடத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காகக் கவியரசுப் பட்டத்தைத் துறப்பதாக அறிவிக்கும் நடிகன் ஒருவனுக்கும் இடையில் தமிழ்க் கவிதையில் முரண்பட்ட எண்ணற்ற முகங்கள் விரிந்துகொண்டிருக்கின்றன.

---------------------------------------------------------

வீட்டின் மூலையில் ஒரு சமையலறை - சிறுகதை - அம்பை:

சமையலறை, நகைகள், குழந்தைகள், பப்பாஜி எல்லாவற்றையும் துறந்த நீங்கள்தான். அறுபட்ட நீங்கள். வெறும் கேஸர்பாயி. கேஸர்பாயி மட்டுமே. அங்கிருந்துதான் பலம். அதிகாரம்.

அதை எல்லாம் துறந்த நான்... நான்... யார்?

கண்டுபிடியுங்கள். முங்கிப்பாருங்கள்.

எதில்?

கிணற்றில். உங்கள் தனிப்பட்ட கிணற்றில்.

பற்றிக்கொள்ள எதுவுமில்லையே ... பயமாக ...

இன்னும் முங்குங்கள். முங்குங்கள். கேஸர்பாயிக்கும் உலகுக்கும் என்ன சம்பந்தம் என்று பாருங்கள்.

நிதம் இடப்பட்ட அந்த முந்நூறு சப்பாத்திகளும், பதினாலு குழந்தைகளை உதைக்கவிட்ட வயிறும் இல்லாவிட்டால்

மட்டன் புலவு, மஸாலா, பூரி-ஆலு, தனியாப் பொடி, உப்பு, சர்க்கரை, பால், எண்ணெய், நெய் என்று யோசித்திருக்காவிட்டால் 

நாலு நாட்களுக்கு ஒரு முறை ஸடவ் திரியை இழுத்துவிட வேண்டும்; மண்ணெண்ணெய் கிடைக்கும்போது வாங்க வேண்டும்; மழைக் காலத்தின் கவலை அரிசி, பருப்பில் பூச்சி; மாங்காய்க் காலத்தில் ஊறுகாய்; வெய்யில் காலத்தில் அப்பளம்; பழங்கள் வரும் காலத்தை ஒட்டி ஷர்பத், ஜூஸ், ஜாம்; பழைய துணிகள் போட்டுப் பாத்திரம்; சமையலறை முற்றத்துக்கு இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை சுண்ணாம்பு; மாதவிடாய் தள்ளிப்போயிற்றோ என்று கவலை; தள்ளிப்போகாவிட்டால் கவலை என்று மண்டையெல்லாம் பூச்சி, ஊறுகாய், சுண்ணாம்பு அடைத்திருக்காவிட்டால். 

மூளையின் இழுப்பறைகளை இவற்றை எல்லாம் போட்டு நிரப்பியிருக்காவிட்டால்

ஒரு வேளை நீங்கள் அந்த ஆப்பிள் விழுவதைப் பார்த்திருக்கலாம்; தண்ணீர் கெட்டிலின் மூக்கு நுனி ஆவியைப் பார்த்திருக்கலாம்.

புதுக் கண்டங்களைக் கண்டுபிடித்திருக்கலாம். கைலாஸ பர்வதத்தில் அமர்ந்து காவியம் எழுதியிருக்கலாம். குகைகளுக்குள் ஓவியம் தீட்டியிருக்கலாம். பறந்திருக்கலாம். போர்கள், சிறைகள், தூக்கு மரங்கள், ரஸாயன யுத்தங்கள் இல்லாத உலகத்தை உண்டாக்கியிருக்கலாம்.

---------------------------------------------------------

புதுமைப்பித்தன் தன் படைப்புக்கள் குறித்து:

வேதாந்திகள் கைக்குள் சிக்காத கடவுள் மாதிரிதான் நான் பிறப்பித்துவிட்டவைகளும். அவை உங்கள் அளவுகோல்களுக்குள் அடைபடாதிருந்தால் நானும் பொறுப்பாளியல்ல, நான் பிறப்பித்து விளையாடவிட்ட ஜீவராசிகளும் பொறுப்பாளிகளல்ல; உங்கள் அளவுகோல்களைத்தான் என் கதைகளின் அருகில் வைத்து அளந்து பார்த்துக்கொள்கிறீர்கள் என்று உங்களுக்குச் சொல்லிவிட விரும்புகிறேன்.[12]

இலக்கியத்தில் இன்னதுதான் சொல்ல வேண்டும், இன்னது சொல்லக்கூடாது என ஒரு தத்துவம் இருப்பதாகவும், அதை ஆதரித்துப் பேசுவதாகவும் மனப்பால் குடித்துக்கொண்டிருக்கலாம். உண்மை அதுவல்ல; சுமார் இருநூறு வருஷங்களாக ஒருவிதமான சீலைப்பேன் வாழ்வு நடத்திவிட்டோம். சில விஷயங்களை நேர் நோக்கிக் பாக்கவும் கூசுகிறோம். அதனால் தான் இப்படிச் சக்கரவட்டமாகச் சுற்றி வளைத்துச் சப்பைக்கட்டு கட்டுகிறோம். குரூரமே அவதாரமான ராவணனையும், ரத்தக்களறியையும், மனக் குரூபங்களையும், விகற்பங்களையும் உண்டாக்க இடம் இருக்குமேயானால், ஏழை விபசாரியின் ஜீவனோபாயத்தை வர்ணிப்பதாலா சமூகத்தின் தெம்பு இற்றுப்போய் விடப்போகிறது? இற்றுப்போனது எப்படிப் பாதுகாத்தாலும் நிற்கப்போகிறதா?

மேலும் இலக்கியம் என்பது மன அவசத்தின் எழுச்சிதானே? நாலு திசையிலும் ஸ்டோர் குமாஸ்தா ராமன், ஸினிமா நடிகை சீத்தம்மாள், பேரம் பேசும் பிரமநாயகம் - இத்யாதி நபர்களை நாள் தவறாமல் பார்த்துக்கொண்டிருந்து விட்டு, இவர்களது வாழ்வுக்கு இடமளிக்காமல், காதல் கத்தரிக்காய் பண்ணிக்கொண்டிருப்பது போன்ற அனுபவத்துக்கு நேர் முரணான விவகாரம் வேறு ஒன்றும் இல்லை. நடைமுறை விவகாரங்களைப் பற்றி எழுதுவதில் கௌரவக் குறைச்சல் எதுவும் இல்லை[11]

---------------------------------------------------------

காருகுறிச்சி தேடி - லலிதாராம்:

காருகுறிச்சி அருணாசலத்தின் வாசஸ்பதியில் ஒன்றரை நிமிடங்கள் ஆனதும் தார ஸ்தாயி காந்தாரத்தில் ஒரு கூவல்.

சத்தியமாய் கூவலேதான். மனித வாசிப்பில் அந்தக் காந்தார வளைவு சாத்தியமேயில்லை. குயிலாக மாறினால்தான் அந்தக் குழைவும் வளைவும் சாத்தியமாகும்.

கைபேசியை நிறுத்திவிட்டு மனத்துள் அந்தக் கூவலை மட்டும் மந்திர ஜெபம் போல ஒலிக்க வைத்தபடி நடந்துகொண்டிருந்தேன்.

திடீரென்று யாரோ தோளைத் தொட்டது போன்ற உணர்வு.

திரும்பிப் பார்த்தேன் - நிஜமாகவே யாரோ என்னைத் தொட்டுக் கூப்பிட்டிருக்கிறார்.

காதிலிருந்து ஹெட்ஃபோன்ஸைக் கழட்டினேன். என்னை நிறுத்தியவர் ஏதோ கேட்டார். மனத்தில் ஒன்றும் ஏறவில்லை.

"கியா?” என்று வினவினேன்.

"இதர் வைன் ஷாப் கிதர் ஹை?”

அடப்பாவி! அந்தக் காந்தாரத்தின் போதையில் தள்ளாடியா நடந்தேன்?

---------------------------------------------------------

பாரதியின் கட்டுரையிலிருந்து: 

'உலக நடையிலே, உண்மை முதலிய குணங்கள் ஸரஸ்வதி தேவியின் கருணைக்கு நம்மைப் பாத்திரமாக்கி, நம்மிடத்திலே தேவவாக்கைத் தோற்றுவித்து நமது வேள்வியைக் காக்குமென்பது கண்டோம். இலக்கியக்காரருக்கோ வென்றால் இத்தெய்வமே குலதெய்வம், அவர் இதனைச் சுடர் செய்யும் உண்மையுடனே போற்ற வேண்டும். எதுகை மோனைகளுக்காக சொல்ல வந்த பொருளை மாற்றிச் சொல்லும் பண்டிதன் ஸரஸ்வதி கடாக்ஷத்தை இழந்து விடுவான். யமகம், திரிபு முதலிய சித்திரக் கட்டுக்களை விரும்பிச் சொல்லுக்குத் தக்கபடி பொருளைத் திரித்துக்கொண்டு போகும் கயிறுப்பின்னிப் புலவன் வாணியின் திருமேனியை நோகும்படி செய்கின்றான். அவசியமில்லாத அடைமொழிகள் கோப்போன் அந்த தெய்வத்தின் மீது புழுதியைச் சொரிகின்றான். உலகத்தாருக்குப் பொருள் விளங்காதபடி இலக்கியஞ் செய்வோன் அந்த சக்தியைக் கரித் துணியாலே மூடுகின்றான். 'வெள்ளைக் கலை’ யுடுத்துவதில்லை. மனமறிந்த உண்மைக்கு மாறுசொல்லும் சாஸ்திரக்காரனும், பாட்டுக்காரனும் ஸரஸ்வதிக்கு நிகரில்லாத பாதகம் செய்கின்றனர். இலக்கியத்துக்குத் தெளிவும் உண்மையுமே உயிரெனலாம். இவ்வுயிருடைய வாக்கே அருள் வாக்கு என்று சொல்லப்படும்.

---------------------------------------------------------

கீழை நாட்டு கதைகள் - மார்கெரித் யூர்ஸ்னார்:

‘ஐயோ! என்னுடைய சிறிய பாதங்களே,' என்று கதறினாள். 'என் பிரியமான கணவர் கூடிய சீக்கிரமே என்னைப் பார்ப்பதற்காக மலையின் உச்சிவரை விரைவாக என்னைக் கொண்டுசெல்ல இனியும் உங்களால் முடியாதே. ஓடும் நீரின் புத்துணர்ச்சியை இனியும் நீங்கள் உணர முடியாது. தேவன் உயிர்த்தெழும் தினத்தன்று காலையில் தேவதைகள் மட்டுமே உங்களைக் கழுவுவார்கள்.'

"தங்க நிறப் பாவாடையால் மூடியிருந்த அவளுடைய முழங்கால்கள்வரை செங்கல்களும் கற்களும் எழும்பின. அந்தப் பிறையின் மீது படிந்தபடி நிமிர்ந்து நின்றிருந்த அவளைப் பார்க்கும்போது கன்னி மேரி தன்னுடைய பீடத்திற்குப் பின்னால் நின்றிருந்ததைப் போல இருந்தது."

'விடைபெறுகிறேன், என் அன்பு முழங்கால்களே,' என்று சொன்னாள் அந்த இளம் பெண். 'என் குழந்தையை இனியும் உங்களால் தாலாட்ட முடியாது. பழத் தோட்டத்தில் உணவையும் நிழலையும் ஒருங்கே தரும் அழகான மரத்தடியில் உட்கார்ந்துகொண்டு ருசியான பழங்களால் என் மடியை இனியும் நிரப்பவே முடியாதே.'

சுவர் இன்னும் சற்று உயர்ந்துவிட்டிருந்தது. அந்த இளம் பெண் தொடர்ந்து சொன்னாள்:

‘என் உடம்பின் இரு பக்கங்களிலும் இருக்கும் என் செல்லக் கைகளே, இனியும் சமையல் செய்ய முடியாத கைகளே, இனியும் கம்பளியைப் பிழிய முடியாத கைகளே, என்னுடைய அன்பானவரின் உடலை வளைத்துக் கோத்துக்கொள்ள முடியாத கைகளே, போய்வருகிறேன். என் இடுப்பே, என் வயிறே, மகப்பேறையோ காதலையோ இனியும் நீங்கள் உணரப் போவதில்லை. நான் இனியும் பெற்றெடுக்க முடிந்திருக்கக்கூடிய சிறு குழந்தைகளே, அவகாசம் இல்லாததால் என்னுடைய ஒரே மகனுக்கு என்னால் அளிக்க முடியாமல் போய்விட்ட அவனுடைய சகோதரர்களே, எனக்குக் கல்லறையாகப்போகும் இந்தச் சிறையில், தீர்ப்புநாள்வரை உறக்கமில்லாமல் நின்றபடி உங்களுக்கு நான் துணையாக இருப்பேன்.'

“அவளுடைய நெஞ்சுவரை கல்சுவர் உயர்ந்துவிட்டிருந்தது. திடீரென்று அவளுடைய உடலின் மேல்பகுதியில் ஒருவித சிலிர்ப்பு ஏற்பட்டது. கரங்கள் இரண்டையும் நீட்டிக் கெஞ்சுவதைப் போன்ற பார்வை அவளுடைய கண்களில் தோன்றியது.”

‘என் மைத்துனர்களே,' என்று அவள் மரியாதையுடன் சொன்னாள். ‘எனக்காக இல்லாவிட்டாலும் இறந்துபோன உங்களுடைய தம்பிக்காகவாவது என் குழந்தையைப் பற்றி நினைத்துப்பாருங்கள். அவனைப் பசியால் இறக்க விடாதீர்கள். என்னுடைய நெஞ்சின்மேல் சுவரை எழுப்பிவிடாதீர்கள், சகோதரர்களே. வேலைப்பாடு மிக்க சட்டைக்குள் இருக்கும் இரண்டு மார்பகங்களும் அவனுக்கு எட்டும்படியாக இருக்க விடுங்கள். தினமும் காலை, மதியம், அந்தி வேளைகளில் என் குழந்தையை அழைத்துவரச்செய்யுங்கள். என்னுள் மிஞ்சியிருக்கும் இறுதி உயிர்த்துளிகள் என்னுடைய இரண்டு மார்பகங்களின் நுனிவரை இறங்கி நான் பெற்றெடுத்த பிள்ளைக்கு ஊட்டம் அளிக்கட்டும். என்னிடம் தாய்ப்பால் என்றைக்குத் தீர்ந்துவிடுமோ, அன்று முதல் என்னுடைய ஆத்மாவை அவன் பருகட்டும். தீய சகோதரர்களே, இதற்கு நீங்கள் ஒப்புக் கொண்டால், இறைவன் முன்னால் உங்களைச் சந்திக்கும் தினத்தன்று என் அன்பான கணவனும் நானும் நீங்கள் இழைத்த தீங்குகளைப் பற்றிச் சொல்ல மாட்டோம்.'

“மிரண்டுவிட்ட சகோதரர்கள் அவளுடைய இறுதி ஆசையை நிறைவேற்ற ஒப்புக்கொண்டு அவள் மார்பகங்கள் தெரியும் வகையில் இரு செங்கல் அளவுக்கு இடைவெளி விட்டார்கள். பிறகு, அந்த இளம் பெண் முணுமுணுத்தாள்:

‘அன்புச் சகோதரர்களே, என் வாய்க்கு முன்னால் செங்கற்களை வைத்துவிடுங்கள். ஏனென்றால், இறந்தவர்களின் முத்தங்கள் உயிரோடு இருப்பவர்களைப் பயமுறுத்தும். ஆனால், என்னுடைய கண்களுக்கு முன்பாக மட்டும் இரண்டு ஓட்டைகள் இருக்கும்படி செய்துவிடுங்கள். அப்போதுதான் என் குழந்தைக்கு என்னுடைய பால் போய்ச்சேருகிறதா என்று பார்க்க முடியும்.'

---------------------------------------------------------

தன் வெளிப்பாடு- சுநீல் கங்கோபாத்தியாய

மனிதன் ஏன் குளிர்காலத்தில் விடியுமுன் எழுந்திருந்து சூரியோதயம் பார்க்க டைகர் ஹில்லுக்குப் போகிறான்? நான் ஒளிவு மறைவின்றிச் சொல்கிறேன். டைகர் ஹில்லிலிருந்து நான் பார்த்த சூரியோதயத்தில் பெண்மையின் அழகைக் கண்டேன். ஆனால் யாராவது ஒரு பெண்ணிடம் சூரியோதயத்தின் அழகைப் பார்க்க நான் விழைகிறேன்.

---------------------------------------------------------

கரிசல் காட்டுக் கடுதாசி - கி. ராஜநாராயணன்

அண்ணாச்சி இறந்து இன்றைக்கோட முப்பத்தி ஐந்து வருஷங்கள் முடிந்துவிட்டது. இப்பொ அவர் குடும்பத்திலே அவருடைய மனைவியார் மட்டும்தான் இருக்கிறதாகக் கேள்வி. அவருடைய ஞாபகமாக இருப்பதெல்லாம் எங்கள் நெஞ்சுக்குள் அவரைப் பற்றிய அணையாத நினைப்புகளும் இந்தக் கட்டுரையுமே. அவர் எழுதி எழுதி வைத்துவிட்டுப் போன கவிதை நோட்டுகள் இசைப்பாடல்கள் எல்லாம் எங்கேயோ ஒரு மிட்டாய்க்கடையில் பலகாரம் சுற்றப்பட்டு எப்படி எப்படியோ போயிருக்கலாம். இப்போது, இருப்பவை என்று சொல்லிக் கொள்ள யார் யாருக்கோ அவர் எழுதித் தந்த திருமண வாழ்த்துக் கவிதைகள் தான்.

எதோ ஒரு மண்சுவரில் கண்ணாடிச் சட்டம் போட்டு மாட்டி வைத்திருக்கும் திருமண வாழ்த்து மடலுக்குப் பின்புறம் ஒரு ராமபாணப் பூச்சியாக இன்றும் இருக்கிறார் அண்ணாச்சி என்று நம்புகிறேன்; அவருடைய கவிதைகள் பேரில் அவ்வளவுக்குப் பற்று உண்டு அவருக்கு.

---------------------------------------------------------

மணல் - அசோகமித்திரன்:

சாலை விபத்துகள் சாலைகள் தோன்றிய நாட்களிலிருந்து நேர்ந்து வர வேண்டும். மனுநீதிச் சோழன் பெருமையே ஒரு சாலை விபத்தைத்தான் சார்ந்திருக்கிறது. குருக்ஷேத்ர யுத்தத்தில் தேர்ச் சக்கரங்கள் புதையுண்டு கர்ணன் திண்டாடியதற்கு அவனுக்கு எப்போதோ நேர்ந்த ஒரு சாலை விபத்துதான் காரணம். சார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய 'எ டேல் ஆஃப் டூ சிடீஸ்' நாவலின் இறுதியில் நேரும் பெரிய சிக்கலுக்கு ஆரம்ப அத்தியாயங்களில் நிகழும் ஒரு சாலை விபத்துதான் காரணம் என்று கூறிவிடலாம். அந்தச் சாலை விபத்தில்தான் இறுதிச் சோகத்தை விளைவிக்கும் இரும்பு மனதுடைய பெண்மணி அறிமுகப்படுத்தப்படுகிறாள்.

சென்னை சாலை விபத்துகள் பற்றிய தகவல்கள் பகிரங்கமாக ஒரு விளம்பரப் பலகையில் எழுதி வைக்கப்படுகின்றன. அண்ணா சாலையில் ஆயிரம் விளக்குப் பகுதியில் வைக்கப்பட்டிருக்கும் இந்த பிரமாண்டமான பலகையில் குறிக்கப்பட்டிருக்கும் தகவல்களைப் படிக்க முற்படுகையில் பல விபத்துகள் நேர்ந்ததாகக் கூறுகிறார்கள்.

விபத்துகள் எல்லாச் சாலைகளிலும் நிகழ்ந்து விடுவதில்லை. ஒரு நாளைக்கு லட்சக்கணக்கில் வாகனங்களும் பாதசாரிகளும் செல்லும் சைனா பஜார் சாலையில் விபத்துகள் நேர்வதில்லை. ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கில் வந்து போகும் பயணிகளும் நூற்றுக் கணக்கில் கிளம்பிச் செல்லும் ஆம்னி பஸ்களும் பயன்படுத்தும் எழும்பூர் கென்னட் சந்தில் விபத்துகள் நேர்வதில்லை. ஆனால், ஜி.எஸ்.டி. சாலையில் மீனம்பாக்கம் விமான நிலையம் எதிரில் அநேகமாகத் தினமும் ஒரு விபத்து நிகழ்ந்து விடுகிறது. வேறெங்கெல்லாமோ பிரகாசமான விளக்குகளைப் பொருத்தியிருக்கும் நகரசபை இங்கு மட்டும் ஏன் இருட்டாகவே வைத்திருக்கிறது? அகால மரணமடைந்தோரின் ஆவிகள் முடிவு பெற்ற இடத்தையே சுற்றிச் சுற்றி வருமென்பது உண்மையானால் மீனம்பாக்கம் விமான நிலையம் எதிரில் ஆயிரக்கணக்கில் பிசாசுகள் உலவிக்கொண்டிருக்க வேண்டும். ஒருவேளை அதுவேதான் மீண்டும் மீண்டும் அங்கு உயிர்கள் பறி போவதற்குக் காரணமோ?

---------------------------------------------------------



கற்றதும் பெற்றதும் - சுஜாதா

உண்மையாக திருவல்லிக்கேணி தினங்கள் எதுவும் சுத்தமாக ஞாபகம் இல்லை. வயசும் பத்தாது. அப்பாவுக்கு ஊட்டியில் இருந்த பைக்காரா பவர் ஹவுஸுக்குச் செல்லும் வழியில் மலை உச்சியில் இருந்த க்ளென்மார்கனுக்கு மாற்றலாகியிருக்கிறது. இது 1937 வாக்கில் இருக்கலாம்.

எனக்கு அடுத்த பிரசவத்துக்கு அம்மா பிறந்த வீட்டுக்கு ஸ்ரீரங்கம் அனுப்பப்பட்டாள். அம்மா இரண்டு குழந்தைகளுடன் மூன்றாவது பிரசவத்துக்கு வந்திருக்கிறாள். பெண் குழந்தை அந்தப் பெண் பிறந்த கையோடு அம்மாவை அழைத்துச் செல்ல அப்பா வந்திருக்கிறார். பாட்டி “பச்சை உடம்பு... பச்சைக் குழந்தை" என்று சொல்லியும் கேளாமல், கைக் குழந்தையுடன் நாங்கள் இரண்டு குழந்தையுடன் ஊட்டிக்கு ரயிலில் பயணப்பட்டிருக்கிறார்கள். ரயிலில் நல்ல கூட்டமாம். குழந்தையைத் தரையில் கிடத்தி அருகில் படுத்திருக்கிறாள். குழந்தை ராத்திரி ரயிலில் இறந்துவிட்டது. வழியில் இறங்கி அதைப் புதைத்து விட்டார்களாம். இந்தச் சம்பவத்தைப் பற்றி அப்பா என்னிடம் பேசியதே இல்லை. அம்மா நான் நன்றாக வளர்ந்து சுயசிந்தனையும் மனப்பக்குவமும் வந்தப்புறம்தான் சொல்லத் தலைப்பட்டிருக்கிறாள். எனக்கு நல்லவேளை அந்த இரவுப் பயணம் எதும் ஞாபகம் இல்லை என்றுதான் எண்ணியிருந்தேன். ஆனால், உள்மனசில் அது எங்கோ தேங்கியிருக்க வேண்டும்.

இது ஒரு சம்பவம்.

என் கல்யாணம் ஆகி முதல் குழந்தை விழுப்புரத்தில் பிறந்தது. பெண் குழந்தை. பிறந்த சில தினங்களில் இறந்து விட்டது. அப்போது நான் டெல்லியில் இருந்தேன். அவசரமாக ப்ளேன் பிடித்து மனைவிக்கு ஆறுதல் சொல்ல வந்தேன்.

குழந்தையைப் பறிகொடுத்த அந்த இளம் மனைவியை முதலில் பார்த்தபோது என் அடிமனதில் பதிந்தது ஒரே ஒரு பிம்பம்.

அண்மையில் என் 'கனவுத் தொழிற்சாலை’ நாவலைப் புரட்டிக் கொண்டிருந்தபோது கீழ்வரும் பகுதி ஆச்சரியம் அளித்தது. தானாகவே எழுதிக் கொண்ட பகுதிகள் ஒரு ஒரு எழுத்தாளனுக்கு அரிதாகவே கிடைக்கும்.

“லூயிஸ்... டாமினிக் லூயிஸ்” என்று மேரி விசித்து அழ ஆரம்பித்தாள். குழந்தை நிதானமாகத் தன் சின்னப் போராட்டத்தைக் கைவிட்டுக் கொண்டு இருந்தது.

“என் பிள்ளைங்க... என் பிள்ளைங்க... பெத்து இருபது நா ஆவலைங்க."

“அழாதம்மா... இந்தக் குழந்த சர்வேசுவரனுடைய தேவதை மாதிரி. இது என்ன பாவம் செய்தது... ஒண்ணுமில்லைல? இதற்கு எப்பேர்ப்பட்ட சாம்ராஜ்யம் காத்திருக்குது தெரியுமா... குழந்தை இந்த மோட்ச ஸ்தூல சரீரத்தைவிட்டு சூட்சும சரீரமாய் அந்த நாளில் இது எந்திரிக்கிறபோது இதைப் பரலோகத்துத் தேவதைகள் எல்லாம் தங்க வாசலிலே தாங்கி வாங்கிக்குவாங்கம்மா... பேர் என்ன சொன்னிங்க?''

“லூயிஸ் டாமினிக் அருமைராசன்.'

“லூயிஸ் டாமினிக் அருமைராசன்! சமாதானத்துடன் கடவுளோடு ஒன்றித்திருப்பாயாக. உன் ஆத்மா அந்த சர்வேஸ்வரனுடன் இளைப்பாறட்டும்.

குரு அந்த குழந்தைக்குப் பரிசுத்த எண்ணெய் தடவ, அந்தக் குழந்தையின் பிராணன் என்னும் அழகான இளம் காற்று ஒரு பிரபஞ்சக்கானத்துடன் கலந்துகொள்ள பிரயாணப்பட்டது.

லூயிஸ் டாமினிக் அருமைராசன் பெங்களூரில் பிறந்து, பதினெட்டு நாள் வாழ்ந்து சென்னைக்கு வந்து அதன் வெளிப்புறத்தில் இருக்கும் செமெட்டரியில் ஒரு சின்னப் பெட்டியில் அடக்கமானான். உபதேசியார் 'மண்ணிலே பிறந்தாய்... மண்ணிற்கே போகிறாய். கடவுளின் சமாதானத்தில் இளைப்பாறுவாயாக' என்று முணுமுணுக்க, செமெட்டரிக்கு வெளியில் சகாயமேரி தெருவோரத்தில் உட்கார்ந்திருக்க, அவள் மார்பெல்லாம் முலைப்பால் நனைந்திருந்தது.

செத்துப்போன தங்கைக்கும் மரித்த மகளுக்கும் பல வருடங்கள் கழித்து ஒரு அழகான கிறித்தவ நல்லடக்கம் செய்தபின்தான் என் மனதின் அடித் தளத்தில் இருந்த அந்தச் சோகம் வடிந்தது.

---------------------------------------------------------

நம் காலத்து நாயகன் - மிகெயில் லெர்மன்தோவ்:

என் அன்பார்ந்த கனவான்களே, “நம் காலத்து நாயகன்" உருவச் சித்திரம் என்பது சரியே, ஆனால் ஒரு மனிதனது அல்ல: நமது தலைமுறை அனைத்தின் குறைபாடுகள் அவற்றின் முழு வளர்ச்சியில் தீட்டப்பட்டிருக்கும் உ உருவச் சித்திரம் இது. மனிதன் இவ்வளவு கெட்டவனாக இருக்க முடியாது என்று நீங்கள் என்னிடம் மறுபடி சொல்வீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்வது இதுதான்: எல்லாத் துன்பியல் கதைகளிலும் காதல் கதைகளிலும் வரும் கேடர்கள் நிலவுவது சாத்தியம் என்று நீங்கள் நம்பினால் பிச்சோரின் யதார்த்தமானவன் என்பதை எதனால் நம்ப மறுக்கிறீர்கள்? இன்னும் எவ்வளவோ பயங்கரமும் விகாரமுமான கற்பனைகளை நீங்கள் வியந்து பாராட்டினீர்கள் என்றால் இந்தப் பாத்திரம், கற்பனை என்ற முறையில், உங்களது கருணைக்கு ஆளாகாதது ஏன்? நீங்கள் விரும்புவதைக் காட்டிலும் அதிகமான உண்மை இந்தப் பாத்திரத்தில் இருப்பது தான் இதன் காரணம் அல்லவா?

ஒழுக்கம் இதனால் மேம்படாது என்கிறீர்களா? மன்னியுங்கள். மக்களுக்கு இனிப்புப் பண்டங்களை ஊட்டியது போதும், அவர்களது இரைப்பை இதனால் கெட்டுவிட்டது; தேவையானவை கசப்பு மருந்துகள், காட்டமான உண்மைகள். ஆயினும் மக்களின் குறைகளைச் சீர்திருத்துவோன் ஆவதாக இந்நூலின் ஆசிரியன் எப்போதாவது பெருமை சான்ற கனவு கண்டான் என்று இதன் பின் எண்ணிவிடாதீர்கள். இம்மாதிரி அறியாமையிலிருந்து ஆண்டவன் அவனைத் தப்புவிப்பானாக! தற்கால மனிதனை, தான் புரிந்து கொள்ளும் மாதிரியில், சித்திரிப்பது அவனுக்கு மகிழ்ச்சி அளித்தது, அவ்வளவு தான். தன்னுடையவும் உங்களுடையவும் துர்ப்பாக்கியவசத்தால் ஆசிரியன் இந்தத் தற்கால மனிதனை மிக அடிக்கடி எதிர்ப்பட்டிருக்கிறான். நோய் இன்னதென்று குறிக்கப்பட்டுவிட்டதே போதும், அதை எவ்வாறு குணப்படுத்துவது என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்!

---------------------------------------------------------

புதிய கந்த புராணம் - புதுமைப்பித்தன்:

திருஅவதாரப் படலம்

திருநெல்வேலியில் நான்காவது முக்கிய விஷயம் கி.பி. 1916ஆம் வருடம் ஒரு இரவில், திரு.அம்மையப்ப பிள்ளைக்கும் சிவகாமி அம்மாளுக்குமாக - அந்த இரவில் முக்கியமாக அந்த அம்மாள்தான் பங்கெடுத்துக் கொண்டார்கள்- திரு. கந்தப்ப பிள்ளை இந்த உலகில் ஜனித்தார்.

பிறக்கும் பொழுது உலகத்தில் ஒரு உற்பாதங்களும் தோன்றவில்லை. ஆனால் அவர் மற்றவரைப் போன்றவரல்ல என்பதை வருகையிலேயே எடுத்துக் காண்பித்துவிட்டார். இவருடைய தாயார் இவர் வரும்வரை பிலாக்கணத்தையும் முனகலையும் கடைப்பிடித்திருந்தாலும் அவர் தாயின் வழியைப் பின்பற்றவில்லை. இதை அவர் தமது பெருமையை ஸ்தாபிக்க சரியான வழியென்று நினைத்திருக்கலாம். ஆனால் அவர் வருகையின் வரவேற்புக் கமிட்டியின் தலைவரான மருத்துவச்சியம்மாள் அப்படி நினைக்கவில்லை. அவரைத் தலைகீழாகப் பிடித்துக் குலுக்கி, முதுகில் கொடுத்த அறையில் ஆரம்பித்த அழுகை, அவர் வாழ்க்கையின் சூக்ஷும தத்துவமாக ஜீவியத்தின் இறுதிவரை இருந்தது.

திரு. கந்தப்ப பிள்ளை இவ்வுலகத்தில் வந்த பிறகு கார்த்திகைப் பெண்கள் அறுவரால் பாலூட்டி வளர்க்கப்படாவிட்டாலும் ஜாம்புத் தீபத்தின் மேற்கே இருக்கும் ஒரு ராஜ்யத்திலிருந்து வந்த இரும்பினாலான காமதேனுவின் பாலை அதாவது மெல்லின்ஸ், கிளாஸ்கோ என்ற அம்ருதத்தை அருந்தி வளர்ந்தார் என்பதை உணர வேண்டும். பழைய ஹோதாவில் சிறு பறையும் சிறு தேரும் இழுத்துத் திரியாவிட்டாலும், சிறு டிரம்மும் சிறு தகரமோட்டாரும் அவருக்கு விளையாட்டுக் கருவியாக இருந்தன. சிவகாமியம்மாள், "செங்கீரையாடியருளே” என்றும் “முத்தந்தருகவே" என்றும் சொல்லாவிட்டாலும், கையிலிருந்ததை வைத்துக்கொண்டு அவர் இந்த உலகத்தில் ஜனித்தவுடன் ஆரம்பித்த பிலாக்கணத் தத்துவத்தை நன்றாக வளர்த்து வந்தாள். காலாகாலத்தில் வித்யாரம்பமும் ஆயிற்று. அவரது குரு, கல்வி என்ற ஹோதாவில் புதிதாக ஒன்றும் சொல்லிக்கொடாவிட்டாலும், "தான்பெற்று, தாய் வளர்த்த" கந்தப்ப பிள்ளையின் பிலாக்கணத் தத்துவத்தை, அருங்கலையாகத் தமது செங்கோலால் பாவித்து வந்தார். கந்தப்ப பிள்ளையும் உருண்டு செல்லும் கல் போலும், காற்றிலகப்பட்ட காற்றாடி போலும், வகுப்புப் படிகளைக் கடந்து கல்விக் கோவிலின் வெளி வாயிலையடைந்தார்.

திருமணப் படலம்

இச்சமயத்தில் அம்மையப்ப பிள்ளையும் சிவகாமியம்மாளும் ஒரு சிறு கூட்டுக் கமிட்டியில் ஆலோசித்து, தமது திருமகனுக்குத் திருமணம் செய்விப்பது என்று தீர்மானித்தார்கள்.

வேங்கை மரத்தடியில் யானையைக் கொண்டு பயமுறுத்திக் காதல்கொள்ள வண்ணாரப்பேட்டையில் வசதியின்மையால், "தந்தை சொல்மிக்க மந்திரமில்லை” என்று, 4000 ரூபாய் தொகையுடன் தினைவிளை கிராமத்து நம்பியா பிள்ளையின் ஏக புத்திரியாகிய ஸ்ரீமதி வள்ளியம்மாளை மணம் செய்ய உடன்பட்டார். திருமணம் ஏக தடபுடலாக அதற்கிருக்க வேண்டிய சண்டை, தோரணைகளுடன் இனிது நிறைவேறியது. மணம் முடியும்வரை கந்தப்ப பிள்ளைக்குத் தனது சகதர்மிணியைப் பார்க்கத் தைரியமில்லாமலிருந்தது. மணம் முடிந்த பிறகும் பார்க்காமலிருக்க முடியாதாகையால் பார்த்தார். அம்மணி என்னவோ அவர் கண்களுக்கு அழகாகத்தான் தோன்றினாள்.

அவருக்குத் தமது சகதர்மிணியைப் பற்றி கிடைத்த செய்திக் குறிப்பில், அவள் படித்தவள் என்றும் சங்கீதப் பயிற்சி உடையவள் என்றும் கண்டிருந்தது. அவள் கல்வி 'குட்டிப்பாலர்' என்பதில் முற்றுப் புள்ளி பெற்றது என்றும் ஹார்மோனியம் வாசிப்பது சுருதிக் கட்டைகளின் மீது எலி ஓடுவது போன்ற இனிய கீதம் என்றும் கண்டு கொண்டார். திரு. கந்தப்ப பிள்ளைக்கு சங்கீதம் பிளேட் கேள்வி ஞானம். அதிலும் வண்ணாரப்பேட்டையில் கிடைக்கக்கூடிய ஓட்டைப் பிளேட் ஞானம். இரண்டும் ஏறக்குறைய ஒத்திருந்ததினால் தமது சகதர்மிணிக்கும் சங்கீதப் பயிற்சி உண்டு என்பதை உணர்ந்தார்.

---------------------------------------------------------

கன்னி - பிரான்சிஸ் கிருபா:

மெசியாவின் காயங்கள்

சொற்களிலிருந்து அர்த்தங்கள் மௌனத்துக்குத் திரும்பும் வழி இது. வெளிச்சம் துளிர்த்திருக்கிறது. மற்றெந்த நாளைவிடவும் நிதானமாக இளங் காலைக்குள் திணிக்கப்படுகிறேன். சுகம்போல் இருக்கிறது. 'நிற்கும் புறப்படும் பேருந்து வாசல்களில் படிக்கட்டுகளைப் பார்க்கமுடிகிறது. பெரியவர்களும் குழந்தைகளும் எதிரெதிர் உலகங்களிலிருந்து கைகளைப் பற்றியவாறு நடக்கிறார்கள். பயணங்களின் வரப்புகளில் முன்னே கூடை பொருத்திய சைக்கிள் செலுத்தும் பெண் எவ்வளவு சிறுமியாக இருக்கிறாளோ அவ்வளவு அழகான வண்ணத்துப் பூச்சி அவளைப் பின்தொடர்கிறது. வழியோரத்து மரங்களிலிருந்து உதிர்கின்றன இன்றைய தாளங்கள். அதிகரித்து வருகிறது முன்னறிமுகமில்லா ஒரு புன்னகைக்கான நிச்சயம். நீரில் வனைந்த பாத்திரத்திலிருந்து இந்நாளை இன்னொரு பாத்திரத்தில் ஊற்றி மாற்றுவதுபோல் கொட்டத் தொடங்குகிறது மழை.

---------------------------------------------------------


அறம் - மயில் கழுத்து - ஜெயமோகன்

பாலசுப்ரமணியன் படபடப்புடன் எதிர்பார்த்த பாட்டு அடுத்து வந்தது “அலர்ஸர பரிதாபம்.” அம்மா மடியில் அமர்ந்து இளமையில் கேட்ட சுவாதித் திருநாள் பாட்டு. பழமையான சுருட்டி. ஓடைநீரில் இழையும் நீர்ப்பாம்பு. கண்ணாடியில் வழுக்கும் மண்புழு. மிதந்து மேற்கில் மறையும் தனிப்பறவை.

தனிமை இத்தனை மகத்தானதா? குரூரமாக கைவிடப்படுதல் இத்தனை தித்திப்பானதா? முற்றாக தோற்கடிக்கப்படுவதில் மாபெரும் வெற்றியொன்றிருக்கிறதா என்ன? சட்டென்று எரிச்சலும் நிம்மதியின்மையும் எழ பாலசுப்ரமணியன் தன் கையை பின்னுக்கிழுத்துக்கொண்டார். இரவின் பிரம்மாண்டமான கரிய கூரையை ஏறிட்டுப்பார்த்தார். முடிவில்லாத ஒளித்துளைகள். மின்னும் அழியா விழிகள். ஏன் இங்கு இப்படி இருக்கிறேன்? எந்த மகத்தான புரியாமைகளால் விளையாடப்படுகிறேன்?

விசும்பல் ஒலி கேட்டு பாலசுப்ரமணியன் திரும்பிப் பார்த்தார். ராமன் மார்பில் இரு கரங்களையும் கூப்பி கண்களிலிருந்து கண்ணீர் வழிய அமர்ந்திருந்தார். இறகுதிர்த்து விண்ணில் நீந்தியது பறவை. சிறகுகள் ஒவ்வொன்றாக உதிர பறவை மட்டும் மேலே சென்றது. பறவையை உதிர்த்துவிட்டு பறத்தல் மட்டும் மேலே சென்றது. வானமென விரிந்த வெறுமையில் இருத்தலென எஞ்சிய ஒரே ஒரு ஒலிக்கோடு நெளிந்து நெளிந்து தன்னைத்தானே கண்டு வியந்தது. இங்கே இங்கே என்றது. என்றும் என்றது. இந்தக்கணம் மட்டுமே என அங்கே நின்றது.

---------------------------------------------------------

இது உரை நடைக்கு அருகிலிருக்கும் கவிதைக்கான கவிதை:

திருமணத்தைச் சரிசெய்தல்

எட்டுமணிக்கே உறங்கச் சென்றுவிடுகிறது வரலாற்றுச் சிறப்புமிக்க சிற்றூர்.
தார்ச்ச்சாலைகளில் வாழைத்தண்டு விளக்குகளின் அநாதை வெளிச்சம்.  
ஹாரன் ஒலிக்காது வந்த குப்பைலாரி எங்களைச் சாலையின் எதிரெதிர் விளிம்புகளுக்குக் கொண்டுசெல்கிறது:  
நான் அவளைப் பார்க்கிறேன். 
அவள் என்னைப் பார்க்கிறாள். 
நாங்கள் இங்கு வந்தது
கொஞ்ச நேரம் அசையாதிருக்க
-எலும்பு முறிவு சிகிச்சை பெற்ற ஒருவரைப் போல- 
பழைய கடலில் புதிய அலைகள்
ஒற்றைப் புன்னை மரத்தில் நோவுற்ற குரங்கு.
தூரத்து உணவகத்தில் இருந்து கசிந்துவரும் போஸா நோவா பாடல்கள் கூறுகின்றன 
அழகும் அமைதியும் திறந்தவெளியும் தொலைவில் இருப்பவை என்று. 
சில தொடுகறிகளை வாங்கிக்கொண்டு கடற்கரை விடுதிக்குத் திரும்புகிறோம் நாங்கள்.
நவ செவ்வியல் டஸ்கனிய தூண்களின் பின்னே
ஒளிந்து விளையாடும் அணில்களைக் காணவில்லை இப்போது. 
உணவு மேஜைகளின் கண்ணிய மௌனத்துள்
மெழுகுதிரி ஒளியில் முட்கரண்டிகளின் போர்சலீன் ஒலிகள்.
நீ குளிக்கச் செல்கிறாய், படுக்கையில் உனது சாட்டின் பைஜாமா.
நான் இந்த நாளின் புகைப்படங்களை அலைபேசியில் ஓட்டிப் பார்க்கிறேன். 
ராமனின் இடிந்த கோட்டை,ராணி கெதவானின் எலும்புகள்,புனித சேவியரின் நகம்,
மரத்தேவாலயம்,கல்லறைத்தோட்டம்..எங்கும் காணவில்லை நான் தேடிவந்த ஒன்று. 
ஜோசே பாவுலோ,அருட்திரு.லார்சன் டயஸ்(1794-1835),
திருமதி.சாந்தா டி கோஸ்டா (1921-1978)
யாரும் உதவ முடியாது நமக்கு, இந்தக் காற்றும், மோனமும், சாவகாசமும் கூட. 
உன்னிடம் வந்துசேர நான் ஒரு பாலம் கட்டவேண்டும்
கடல் மேல் சிறிய பெரிய கற்களைக் கொண்டு.
என்னிடம் வருவதற்கு உனக்கோர் ஒட்டகம் வேண்டும்
கூடவே ஏணியும் கள்ளச்சாவியும்.
நாங்கள் அமர்ந்திருக்கிறோம், கைக்கடிகாரத்தைப் பழுதுபார்ப்பது போல 
தலைகுனிந்து, பூதக்கண்ணாடிகளை அணிந்தபடி
சிறிய ஆணிகளையும் மரைகளையும் நுண்ணிய பற்சக்கரங்களையும் 
கண்ணுக்குத் தெரியாத சுருள் வளையங்களையும்
ட்வீஸர்களால் கழற்றி மாட்டிக்கொண்டு.
நின்றுபோன கடிகாரம் முக்கியமான ஒன்றைக் காட்டுகிறது. 
நான் முட்களை வேறு இடங்களுக்கு நகர்த்துகிறேன்
காற்றோட்டத்திற்காகவோ வெளிச்சத்திற்காகவோ அல்லது வெறுமனே ஒரு மாறுதலுக்காக
        அறைகலன்களை இடம்மாற்றுவது போல.
விடுதி சோப்பின் வாசனை என்னை மறக்கும் தொலைவிற்கு உன்னை கூட்டிச்செல்கிறது
நான் ஒவ்வொரு அடியாக எடுத்துவைத்து உன் வாழ்க்கையில் இருந்து 
பின்வாங்குகிறேன்
ஒவ்வொரு அடியாக அப்படியே..
உன்னைச் சந்திப்பதற்கு முந்தய தினத்திற்கு வந்துவிட்டேன்
ஏறத்தாழ சோகமாக இருந்த அந்த டிசம்பர் மாத வாரக்கடைசிக்கு
‘பனி இறங்குது.. அங்க என்ன செய்துட்டிருக்க இன்னும்' என அம்மா அழைத்த
        அந்த ராத்திரிக்கு
எதிர்காலம் பற்றி யோசித்தபடி நட்சத்திரங்களை வெறித்துக் கொண்டிருந்த
        மொட்டை மாடிக்கு
நீ குளியலறையில் இருந்து முன்பின் தெரியாத ஒருத்தியாய் வெளிவருவாய் 
யாரோ ஒருவருக்குச் சொல்வது போல நானுக்குச் சொல்வேன் 
தொடக்கத்தில் இருந்து நம் காதல் கதையை சைகை மொழியில். 
எதுவும் நிகழவிராத இந்நீண்ட இரவில், அன்பே,
நட்சத்திரங்கள் அதே இடத்தில் இருக்கும்
இடிந்த கோட்டையும் கல்லறைகளும் தேவாலயமும் அப்படியே 
புனித ஜானி வாக்கர், அவரும் நம்மோடு இருப்பார்.


Comments

Popular posts from this blog

ஓசூர் கவிதை ரசனை முகாம் 2025

கவிஞர் இசை அமர்வு: எப்படி எழுந்தனவோ

கவிஞர் மதார் அமர்வு - கவிதையில் சொல்லாட்சிகள்